கோலாலம்பூர்: கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 40,000 பேர் கொண்ட சங்கிலியை மலேசிய போலிசார் அடையாளம் கண்டுள்ளனர்.
இவர்களில் தப்லிக் ஜமாத் குழுமமும் அடங்கும் என்று பெர்னாமா செய்தி நிறுவனம் நேற்று தெரிவித்தது.
கிடைத்த தரவுகளை குற்றவியல் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த பணிக் குழு ஆராய்ந்ததாக மலேசியப் போலிஸ் படைத் தலைவர் அப்துல் ஹமீது பாடோர் கூறினார்.
தரவுகளை சுகாதார அமைச்சு கொடுத்ததாக அவர் தெரிவித்தார். அதன் மூலம் கொவிட்-19 எனப்படும் கொரோனா கிருமித்தொற்றுக்கான மருத்துவப் பரிசோதனைக்கு செல்ல வேண்டியவர்களை போலிசார் அடையாளம் கண்டிருப்பதாக அவர் கூறினார்.
“அண்மையில் ஸ்ரீ பெட்டாலிங் பள்ளிவாசலில் நடைபெற்ற சமய நிகழ்வில் கலந்துகொண்டு ஏறத்தாழ 11,000 தப்லிக் ஜமாத் உறுப்பினர்களை அடையாளம் காண நாங்கள் சுகாதார அமைச்சுக்கு உதவியுள்ளோம்,” என்று இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஹமீது கூறினார்.
“கிடைத்த தரவுகளைக் கொண்டு குறிப்பிட்ட சில அணுகு முறைகளைப் பயன்படுத்தி கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருந்தவர்கள் பாதிக்கப்படும் அபாயத்தில் இருப்பவர்கள் ஆகியோரை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்.
“சம்பந்தப்பட்ட தனிநபர்களை நாங்கள் அடையாளம் கண்டுவிட்டோம். அவர்களது முகவரி, தொலைபேசி எண்கள், அடையாள அட்டை எண்கள், ஆகியவற்றை நாங்கள் கண்டுபிடித்துவிட்டோம்,” என்றார் அவர்.
தப்லிக் ஜமாத் உறுப்பினர்கள் பலருக்கு மருத்துவப் பரிசோதனை செய்துவிட்டதாக குறிப்பிட்ட திரு ஹமீது, அவர்களுக்கு எதிராக கருத்துகளைத் தெரிவிக்க வேண்டாம் என்று கூறினார்.
வெளிநாடுகளில் இருக்கும் தப்லிக் ஜமாத் உறுப்பினர்களைப் பற்றிய விவரங்களையும் சேகரித்து வருவதாக அவர் தெரிவித்தார். அவர்களைப் பற்றிய விவரங்கள் குடிநுழைவுத் துறையிடம் ஒப்படைக்கப்படும் என்றார் அவர்.
அவர்கள் மலேசியா திரும்பியதும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க இது உதவும் என்று திரு ஹமீது கூறினார்.
இதற்கிடையே, கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த ஜோகூர் மாநிலம் எங்கும் 54 தனிமைப்படுத்தும் நிலையங்களை அம்மாநில அரசாங்கம் அமைத்துள்ளது.
நேற்று முன்தினம் நிலவரப்படி 14 தனிமைப்படுத்தும் நிலையங்கள் இயங்கி வருவதாக ஜோகூர் மாநிலத்தின் சுகாதார, சுற்றுப்புறக் குழுத் தலைவர் ஆர்.வித்யானந்தன் தெரிவித்தார்.
“தேவை ஏற்பட்டால் தனிமைப்படுத்தும் இடங்களாக மாற்ற ஏதுவான மற்ற இடங்கள் அடையாளம் காணப்படும். ஹோட்டல்களும் தனியார் கட்டடங்களும் இவற்றில் அடங்கும்,” என்றார் காஹாங் சட்டமன்ற உறுப்பினருமான திரு வித்யானந்தன்.
முகக்கவச மோசடிகள்
கொரோனா கிருமித்தொற்று மோசமடைந்து வரும் வேளையில், மற்ற நாடுகளைப் போலவே மலேசியாவிலும் முகக்கவசங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.
மக்களின் பதற்றத்தைப் பயன்படுத்தி அவர்களிடம் முகக்கவசங்களை விற்பதாகக் கூறி பணம் பறித்தவர்களில் 39 பேரை மலேசிய போலிசார் கைது செய்துள்ளனர். இத்தகைய மோசடி தொடர்பாக 556 வழக்குகள் பதிவாகியுள்ளன. மொத்தம் 4.2 மில்லியன் ரிங்கிட் ஏமாற்றிப் பறிக்கப்பட்டுள்ளது.