கராச்சி: பாகிஸ்தானின் கராச்சி நகரில் வெள்ளிக் கிழமை நிகழ்ந்த விமான விபத்தில் இருவர் மட்டும் உயிர் தப்பியிருக்கலாம் என நம்பப் படுகிறது.
பாகிஸ்தானின் அனைத்துலக விமான நிறுவனத்துக்குச் சொந்தமான ‘பிகே8303’ விமானம் தரையில் மோதி நொறுங்கியது.
அதில் 99 பயணிகளும் எட்டு விமான ஊழியர்களும் இருந்தனர். விபத்தில் இருவர் தவிர மற்ற அனைவரும் கொல்லப்பட்டதாக சிந்து மாநில அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
விமான விபத்துக்கான காரணம் தெரியவில்லை. ஆனால் விமானம் தரையிறங்குவதில் சிரமம் ஏற்பட்டிருக்கலாம் என்று பாகிஸ்தானின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
லாகூரிலிருந்து புறப்பட்ட விமானம் கராச்சி நகரில் உள்ள ஜின்னா விமான நிலையத்தை நெருங்கும்போது உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.30 மணியளவில் விபத்துக்குள்ளானது.
சமூக ஊடகங்களில் பதிேவற்றப் பட்ட படங்களில் இரண்டு இயந்திரங்களுக்கும் அடியில் தீப்பற்றி எரிந்ததற்கான அடையாளங்கள் காணப்பட்டன.
பாகிஸ்தானில் கொரோனா கிருமி பரவலுக்கு எதிரான முடக்கநிலை முடிவுக்கு வந்ததால் விமானங்கள் பறக்க அனுமதியளிக்கப்பட்டது. சிறு சிராய்ப்புகளுடன் உயிர் தப்பிய பயணிகளில் ஒருவரான சுபைர், விமானம் தரையிறங்க முயற்சி செய்த பத்து அல்லது 15 நிமிடங்களில் விபத்துக்குள்ளானது என்றார்.
“எந்தவித பிரச்சினையும் இன்றி விமானம் நல்ல முறையில் பறந்து கொண்டிருந்தது என்றார் அவர்.
விமானம் விபத்துக்குள்ளானதும் சுபைர் மயக்கமடைந்தார். அவர் கண்விழித்துப் பார்த்தபோது எல்லா இடங்களிலிருந்தும் அலறல் சத்தம் கேட்டது. சுற்றிலும் தீப்பற்றி எரி வதையே பார்க்க முடிந்ததாக அவர் கூறினார்.
“நான் இருக்கை வாரை அவிழ்த்துவிட்டேன். ஓரிடத்தில் வெளிச்சம் வந்தது. அந்த வெளிச்சத்தை நோக்கிச் சென்று சுமார் பத்து அடி உயரத்திலிருந்து வெளியே குதித்தேன்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கிடையே விபத்துக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க விமானத்தின் கறுப்புப் பெட்டிகளை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.