சோல்: தென்கொரியாவில் நேற்று புதிதாக 79 பேரை கொவிட்-19 கிருமி தொற்றிவிட்டது. கடந்த ஏப்ரல் 5ஆம் தேதிக்குப் பிறகு பதிவான கிருமித்தொற்றுச் சம்பவங்களில் இதுவே அதிகபட்சம்.
அத்துடன், தொடர்ந்து மூன்று நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்தபடி இருப்பதால் தென்கொரியாவில் இரண்டாவது முறையாக கிருமித்தொற்று பரவத் தொடங்கிவிட்டதோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
தலைநகர் சோலுக்கு மேற்கே அமைந்துள்ள புச்சன் நகரில் இருக்கும் ஒரு சேமிப்புக் கிடங்கு புதிய கிருமித்தொற்றுக் குழுமமாக உருவெடுத்துள்ளது. இவ்வாரத்தில் புதிதாகக் கிருமி தொற்றியோரில் குறைந்தது 69 பேர் அந்தக் குழுமத்துடன் தொடர்புடையவர்கள் என சுகாதார அமைச்சர் பார்க் நியுங் ஹூ தெரிவித்தார்.
இதையடுத்து, தென்கொரியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,344ஆக உயர்ந்துள்ளது. அந்நோய்த்தொற்று இதுவரை அங்கு 269 பேரின் உயிரைப் பறித்துவிட்டது.
கொரோனா கிருமிப் பரவலைச் சமாளிப்பதற்காக மற்ற நாடுகளைப் போல தென்கொரியா இதுவரை கடுமையான ஊரடங்கை நடைமுறைப்படுத்தவில்லை.
இந்நிலையில், கிருமி தொற்றுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தால் புதிய வழிகாட்டி நெறிமுறைகளை அறிவிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், தளவாட மையங்களில் கிருமித்தொற்றைத் தடுக்க சிறந்த கொள்கைகளை வகுக்கும் நோக்கில், நாடு முழுவதும் உள்ள அத்தகைய மையங்களில் கிருமித்தொற்று இருக்கிறதா எனச் சோதனைகள் நடத்தப்படும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.