வாஷிங்டன்: அமெரிக்காவில் கறுப்பின ஆடவரின் கழுத்தில் முட்டியால் மிதித்த மினியபோலிஸ் போலிஸ்காரர் மீது கொலை குற்றறச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட போதிலும் அங்கு நான்காவது நாளாக வன்முறை தொடர்ந்தது.
கைது செய்யப்பட்ட அந்த போலிஸ்காரர் உட்பட மேலும் மூவர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
அமெரிக்காவின் மினசொட்டா மாநிலத்தில் உள்ள மினியபோலிஸ் என்ற இடத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் ஜார்ஜ் ஃப்ளாயிட் என்ற கறுப்பின ஆடவரை மோசடி வழக்கில் கைது செய்ய முயன்ற போலிஸ்காரர் ஒருவர் அவரது கழுத்தில் முட்டியால் மிதிக்கும் காணொளி இணையத்தில் பரவியது.
அவர் பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து கறுப்பின மக்களுக்கு எதிராக போலிசார் நிறவெறியுடன் நடந்து கொள்வதாகக் கூறி மினியபோலிஸ் பகுதியில் வன்முறை வெடித்தது. அங்கிருந்த காவல் நிலையம் தீக்கிரையாக்கப்பட்டது. வாகனங்களும் தாக்குதலுக்கு உள்ளாயின.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட போலிஸ்காரரான டெரெக் சாவ்வினின் கைது, மக்களின் கோபத்தைத் தணிக்கும் என அதிகாரிகள் நம்பினர். ஆனால், நேற்று முன்தினம் இரவு சுமார் 500 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மினசொட்டா மட்டுமின்றி சிகாகோ, இல்லினாய், கலிஃபோர்னியா, கென்டக்சி ஆகிய மாநிலங்
களிலும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
அட்லாண்டா நகரத்தில் கூட்டத்தைக் கலைக்க போலிசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெள்ளை மாளிகைக்கு அருகே ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடியதையடுத்து பாதுகாப்புக் கருதி, வெள்ளை மாளிகை முன்பு போலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், லூயிஸ்வில் என்ற இடத்தில் போலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த கறுப்பின பெண் மரணத்திற்கு நீதி கேட்டு அங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.