பெய்ஜிங்: கொவிட்-19 கிருமியை வென்றதாக சீனத் தலைவர்கள் கொண்டாடிக் கொண்டிருந்தபோது 56 நாட்களுக்குப் பிறகு புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் சென்ற வாரம் உறுதிசெய்யப்பட்டன.
சீனாவின் பெய்ஜிங் மாநிலத்தில் தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதன்மூலம் கிருமியை முறியடித்ததாக நாடுகள் வெற்றிவாகை சூடிக்கொண்டாலும் கிருமி மீண்டும் தாக்கலாம் என்ற பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்.
சுமார் 21 மில்லியன் பேர் வசிக்கும் பெய்ஜிங்கில், இரண்டாவது அலையாக கிருமித்தொற்று சம்பவங்கள் அச்சுறுத்த, முதல் கட்டத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் சில மீண்டும் கொண்டு வரப்பட்டு உள்ளன. இவ்வகை தொற்றுப் பரவல் இனி வரக்கூடிய பல மாதங் களுக்குப் புதிய வழக்க நிலையாக இருக்கும் என்று சீன மருத்துவ பராமரிப்பு வல்லுநர் ஒருவர் கூறியுள்ளார். சீனாவில் நேற்று முன்தினம் பதிவான 28 புதிய கிருமித்தொற்று சம்பவங்களில் பெய்ஜிங்கில் பதிவானவை 21. பாதிக்கப்பட்டவர்களில் நால்வர் வெளி நாடுகளிலிருந்து வந்தவர்கள்.
பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டதை அடுத்து இரண்டாம் அலை தொற்று குறித்த அச்சம் தென்கொரியாவிலும் நிலவுகிறது. கொவிட்-19 கிருமி இல்லை என்று உறுதியளித்த ஒரே வாரத்தில் நியூசிலாந்தில் மறுபடியும் கிருமித்தொற்று உறுதியானது.