பெய்ஜிங்: சீனாவில் பிளேக் நோய் தலைதூக்கி இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். உள் மங்கோலியாவில் மாடு வளர்ப்பவர் ஒருவருக்கு பிளேக் நோய் ஏற்பட்டது உறுதியானதாக சீனாவின் சுகாதார அதிகாரிகள் கூறினர்.
சீனாவில் தோன்றிய கொரோனா கிருமி இன்னமும் ஒடுங்காத நிலையில், புதிய பிளேக் கிருமி பெரும் அளவில் அச்சத்தையும் மிரட்டலையும் ஏற்படுத்தி இருப்பதாகத் தெரிகிறது.
பிளேக் நோய் பாதித்த ஆடவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது நிலை சீராக இருப்பதாகவும் பயான்னூர் என்ற நகரத்தைச் சேர்ந்த சுகாதார ஆணைய அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
விலங்குகளை, குறிப்பாக ஒரு வகை காட்டு அணிலை வேட்டையாடுவதோ, சாப்பிடுவதோ, ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லவோ கூடாது என்று தெரிவித்துள்ள அந்த ஆணையம், மூன்றாம் நிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இந்த ஆண்டு முழுவதும் பிளேக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அமல்படுத்தி இருப்பதாக அந்த நகர நிர்வாகம் தெரிவித்தது. பெய்ஜிங் அதிகாரிகள் கடந்த நவம்பர் மாதம் ஓர் அறிவிப்பை விடுத்தனர். உள் மங்கோலியாவைச் சேர்ந்த இரண்டு பேருக்கு சளிக்காய்ச்சல் பிளேக் நோய் ஏற்பட்டதாக அப்போது அவர்கள் தெரிவித்தனர்.
இந்த வகை பிளேக் நோய் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு எச்சில், சளி மூலம் பரவக்கூடியது. சரியாகச் சிகிச்சை அளிக்கவில்லை என்றால் இது உயிர்க்கொல்லி நோயாகிவிடும். இப்போது ஏற்பட்டு இருக்கும் பிளேக் நோயும் மிகவும் கொடியது என்றும் சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்றால் சுமார் 60 விழுக்காடு வரை மரணம் ஏற்பட்டுவிடும் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, பக்கத்து நாடான மங்கோலியாவில் உள்ள கோவ்ட் என்ற மாநிலத்தில் காட்டு அணில் காரணமாக இரண்டு பேருக்கு பிளேக் நோய் ஏற்பட்டதாகவும் அவர்கள் குணமடைந்ததை அடுத்து அங்கு கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டதாகவும் நேற்று தெரிவிக்கப்பட்டது.