ஹாங்காங்: கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரித்து வருவதால் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழியக்கூடும் என்று எச்சரித்துள்ளார் ஹாங்காங் தலைவர் கேரி லாம்.
ஆரம்பக்கட்டத்தில் தொற்று பரவல் கட்டுப்பாட்டில் வெற்றி கண்ட ஹாங்காங், கடந்த சில வாரங்களாக அன்றாடம் 100க்கும் மேற்பட்ட கிருமித்தொற்று சம்பவங்களை எதிர்கொண்டு வருகிறது. நேற்று 106 புதிய சம்பவங்கள் பதிவாகின. அவற்றில் 98 உள்ளூர் கிருமிப் பரவல் சம்பவங்களாகும்.
ஒரு மாதத்திற்கு முன்னர், அன்றாட வழக்குகளின் சராசரி எண்ணிக்கை 10க்கு கீழ் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கட்டாய முகக்கவசம் மற்றும் உணவகங்களில் அமர்ந்து உணவருந்த தடை மூடுவது உள்ளிட்ட புதிய கடுமையான கட்டுப்பாடுகள் நேற்று நடைமுறைக்கு வந்தன.
கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு 5,000 ஹாங்காங் டாலர் (S$890) அபராதம் விதிக்கப்படக்கூடும்.
இந்நிலையில் பேசிய கேரி லாம், “கிருமித்தொற்றின் பெரும் அளவிலான சமூக பரவலின் விளிம்பில் உள்ளோம். இதனால் நோயாளிகளைக் கையாள்வதில் மருத்துவ அமைப்பு திணறக்கூடும். உயிரிழப்புகள் ஏற்படக்கூடும், குறிப்பாக முதியவர்களிடையே,” என்றார்.
எனவே மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் முடிந்தவரை வீட்டிலேயே இருக்குமாறும் அவர் வலியுறுத்தினார்.
தனிமைப்படுத்தல் பிரிவுகள் நிரம்பி வருவதால், விமான நிலையத்திற்கு அருகே 2,000 தற்காலிக படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை கட்டவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு உதவ சீன அதிகாரிகள் முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.