நியூயார்க்: அமெரிக்காவில் வீடுகளில் நடக்கும் ஒன்றுகூடல் நிகழ்ச்சி, வார இறுதிக் கொண்டாட்ட நிகழ்ச்சிகளால் கொரோனா தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதனால் அந்நாட்டின் நியூயார்க் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஒன்றுகூடல் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வோர் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. அதுபோன்ற நிகழ்வுகளில் கலந்துகொள்வோர் பாதுகாப்பு இடைவெளியை கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
இல்லையெனில் மீண்டும் நோய்த்தொற்று அதிகளவில் பரவக்கூடும் என்று அந்தந்த மாநில நிர்வாகங்கள் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.
நியூஜெர்சியில் கிருமித்தொற்று மீண்டும் பரவாமல் இருக்கும் வகையில் அங்கு பாதுகாப்பு இடைவெளிக் கட்டுப்பாடு மேலும் கடுமையாக்கப்படுகிறது.
அதேபோல் நியூஜெர்சியில் ஒன்று கூடல் நிகழ்ச்சிகளுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் நடக்கும் நிகழ்வுகளில் 25 பேர் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என அம்மாநில ஆளுநர் பிலிப்ஸ் மர்ஃபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அமெரிக்காவில் நான்கு வார காலமாக கொவிட்-19 நோய்த்தொற்றுக்குப் பலியாவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் புதிய தொற்றுச் சம்பவங்கள் கடந்த இரண்டு வாரங்களாக குறைந்து வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. கடந்த வாரம் நோய்த்தொற்றால் மாண்டவர்களின் எண்ணிக்கை அதற்கு முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் 36 விழுக்காடு அதிகம்.
ஆனால் புதிய தொற்றுச்சம்பவங்களின் எண்ணிக்கை கடந்த வாரம் 5 விழுக்காடு குறைந்துள்ளது. முந்தைய வாரத்தில் 435,000 புதிய தொற்றுச்சம்பவங்கள் கண்டறியப்பட்டன.
கடந்த வாரம் கலிபோர்னியா, ஃபுளோரிடா, டெக்சஸ் ஆகிய மாநிலங்களில் கண்டறியப்பட்ட புதிய நோய்த்தொற்றுச் சம்பவங்கள் 180,000. இருப்பினும் இந்த எண்ணிக்கை அதற்கு முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது குறைவே என்று கூறப்படுகிறது. ஓக்லாஹோமா, மொன்டனா, மிசோரி ஆகிய மாநிலங்களில் புதிய நோய்த்தொற்றுச் சம்பவங்கள் தொடர்ந்து ஏறுமுகமாக இருந்து வருகின்றன.
தேசிய அளவில் மேற்கொள்ளப்படும் கொவிட்-19 சோதனைகளில் 8.2 விழுக்காட்டு பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு கூறுகிறது.
பள்ளிகளைத் திறக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு
அமெரிக்காவின் பல மாநிலங்களில் கொவிட்-19 தொற்று மக்களுக்குப் பெரிய அச்சுறுத்தலாக இருந்து வரும் இவ்வேளையில் 35 மாநிலங்களில் மீண்டும் பள்ளிகளைத் திறக்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு பள்ளி ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நாடு முழுதும் ஆசிரியர்களும் கல்வித்துறை ஊழியர்களும் கிருமித்தொற்றை ஒழிக்கும் வரை பள்ளிகளைத் திறக்கக்கூடாது என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆய்வுப்பூர்வமாக வெளியிடப்படும் தரவுகளின் அடிப்படையில்தான் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்று கூறி, இந்தத் திட்டத்தை எதிர்க்கும் வகையிலான பதாகைகளை ஏந்தியவாறு பாதுகாப்பு இடைவெளியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.