சிட்னி: கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன் உள்நாட்டு எல்லைகள் திறக்கப்படுவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது என்று கூறியுள்ளார் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன்.
ஆஸ்திரேலியாவில் நேற்று ஆக அதிக அளவாக 19 பேர் தொற்றுக்குப் பலியாகினர். இவர்கள் அனைவரும் விக்டோரியா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் கடும் கட்டுப்பாடுகளால் விக்டோரியாவில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது. அங்கு நேற்று 322 பேர் தொற்றுக்கு ஆளாகினர். ஐந்து நாட்களுக்குப் பிறகு ஆக குறைவான எண்ணிக்கையாகும் இது.
இந்நிலையில், கிருமிப் பரவல் நெருக்கடியை கட்டுக்குள் கொண்டு வர ஆஸ்திரேலியாவின் எட்டு மாநிலங்கள், தங்களுடைய எல்லைகளை மூடியுள்ளன.
இதற்கிடையே, பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், “கிருமிப் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவதன் தொடர்பில் கடந்த வாரம் எனக்கு இருந்த நம்பிக்கையைவிட இன்று அதிக நம்பிக்கையுடன் இருக்கிறேன்,” என்றார்.
மேலும் மாநில எல்லைகள் மூடப்பட்டுள்ளதால், ஆங்காங்கே சிக்கித் தவிக்கும் குடியிருப்பாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப அனுமதிக்க மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஆஸ்திரேலியாவில் 21,400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 314 பேர் மாண்டுவிட்டனர். இவற்றில் மூன்றில் இரண்டு பங்கு விக்டோரியாவில் நிகழ்ந்தவை.