வெலிங்டன்: நியூசிலாந்தில் மூன்று மாதங்களுக்கு மேல் கிருமித்தொற்று இல்லை. ஆனால் அண்மையில் திடீரென்று சிலருக்கு கிருமி தொற்றியது.
இதனால் அந்நாட்டின் சுகாதாரத் துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எங்கிருந்து கொரோனா கிருமி வந்தது என்பது தெரியாமல் அவர்கள் திணறி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று ஒரு நாள் மட்டும் 13 புதிய கிருமித் தொற்று சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன என்று கிருமி பரவலுக்கு எதிராக கடுமையாகப் போராடி வரும் பிரதமர் ஜெசிண்டா ஆர்டன் கூறியுள்ளார்.
பொதுத்தேர்தல் நடைபெறுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு கொரோனா மீண்டும் தலை தூக்கி உள்ளது. இதனால் கிருமி பரவலைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாக குறைகூறல்கள் எழுந்ததால் அவர் நெருக்கடிக்கு ஆளானார்.
இதையடுத்து ஆக்லாந்து நகரில் கடுமையான நடமாட்டக் கட்டுப்பாடுகளை பிரதமர் ஜெசிண்டா அமல்படுத்தினார்.
நாடு முழுவதும் சமூக இடைவெளி கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார். மூன்று மாதங்களுக்குப் பிறகு இவ்வாரத்தின் முற்பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேருக்கு கிருமித்தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைச் சுட்டிக்காட்டிய ஜெசிண்டா, “கிருமி தந்திரமானது, எளிதில் பரவக் கூடியது.” என்பதை நினைவில் கொள்ள வேண்டும்,” என்றார்.
உள்ளூரில் கிருமிப் பரவல் இல்லாத சூழ்நிலையில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களிலிருந்து கிருமி தொற்றியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து குளிரூட்டப்பட்ட கிடங்குகள் மூடப்பட்டன.