ஆர்க்டிக் பெருங்கடல் பகுதியில் மிகப்பெரிய பனித்துண்டு ஒன்று உடைந்து விழுந்ததாகவும் அதன் அளவு பாரிஸ் நகரத்தைக் காட்டிலும் பெரியதாக இருக்கக்கூடும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
வடகிழக்கு கிரீன்லாந்தில் உடைந்து விழுந்த அந்த பனிப்பாறைத் துண்டு சுமார் 113 சதுர கிலோ மீட்டர் அளவுகொண்டதாக இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ள அவர்கள், உடைந்த பனி பாகங்கள் கடலில் மிதந்து மூழ்குவதைக் காட்டும் செயற்கைக்கோள் படங்களை வெளி யிட்டுள்ளனர்.
வெப்பநிலை அதிகரிப்பால் பனிப்பாறை கொஞ்சம் கொஞ்சமாக உருகி கடைசியில் துண்டாகி விழுந்திருக்கலாம் என ஜிஇயுஎஸ் எனப்படும் டென்மார்க், கிரீன்லாந்து புவியியல் ஆய்வில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
1999ஆம் ஆண்டு முதல் 160 சதுர கிலோ மீட்டர் அளவிலான துண்டுகளை பனிப்பாறை இழந்துள்ளது எனவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. ஆர்க்டிக் பெருங்கடலில் அளவுக்கதிகமான வெப்பமாற்றம் நிகழ்ந்திருப்பதையே பனிப்பாறை துண்டான சம்பவம் உணர்த்துவதாக விஞ்ஞானிகள் அந்த ஆய்வில் கூறியுள்ளனர்.
கிரீன்லாந்தில் உருகும் பனிகட்டிகளால் 2100ஆம் ஆண்டுவாக்கில் கடல் நீர்மட்டம் 10 சென்டி மீட்டர் முதல் 12 சென்டி மீட்டர் வரை உயரக்கூடும் என்று அண்மையில் வெளியான லிங்கன் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று குறிப்பிட்டது.