ஜகார்த்தா: இந்தோனீசியாவில் நேற்று புதிதாக 3,989 பேருக்குக் கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களையும் சேர்த்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 244,676க்கு அதிகரித்துள்ளதாக இந்தோனீசிய சுகாதார அமைச்சு தெரிவித்து உள்ளது. மேலும் புதிதாக 105 மரணங்களும் அங்கு பதிவாகி உள்ளன. மொத்தமாக 9,553 பேர் அங்கு மரணமடைந்துவிட்டனர். தென்
கிழக்காசியாவில் ஆக அதிக கொரோனா மரணம் இந்தோனீசியாவில்தான் நிகழ்ந்துள்ளது.
முன்னதாக, அன்றாடம் பதிவாகும் கிருமித்தொற்றுச் சம்பவங்களில் நேற்று முன்தினம் ஆக அதிகமாக 4,168 சம்பவங்கள் பதிவாயின. அத்துடன், அன்று 112 பேர் மாண்டதாக அறிவிக்கப்பட்டது.
நாடளாவிய புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் அங்கு படிப்படியாக அதிகரித்து வருகின்றன.
அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தலைநகர் ஜகார்த்தாவில் கடந்த வாரம் திங்கள் (செப்டம்பர் 14) முதல் இரண்டாவது பகுதி முடக்கநிலை நடப்பில் இருந்து வருகிறது.
அதன்படி, வர்த்தக நிறுவனங்கள், கடைகள், கடைத்தொகுதிகள், வழிபாட்டுத்தலங்கள் ஆகியன குறைந்த அளவு ஆட்களோடு இயங்கி வருகின்றன. உணவகங்களிலும் பானக் கடைகளிலும் உட்கார்ந்து உண்ணவும் அருந்தவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே, பி.டி. புத்ரி இன்டா என்னும் கடலுணவு நிறுவனத்துக்கு ஏற்றுமதித் தடையை இந்தோனீசிய அரசாங்கம் விதித்துள்ளது. பதப்படுத்தப்பட்ட மீன் தயாரிப்புப் பொட்டலம் ஒன்றில் கொரோனா கிருமி கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து சீனாவுக்கான ஏற்றுமதி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக இந்தோனீசிய மீன்வள அமைச்சு நேற்று முன்
தினம் தெரிவித்தது. கிருமி தொற்றியது எவ்வாறு என்று விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் மற்ற கடலுணவு ஏற்றுமதி நிறுவனங்களுக்குத் தடை இல்லை என்றும் அமைச்சு குறிப்பிட்டது.