வாஷிங்டன்: நவம்பர் மாதம் 3ஆம் தேதி நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பாக வன்முறைச் சம்பவங்கள் ஏற்பட்டால் அதைக் கட்டுப்படுத்த அமெரிக்க ராணுவ வீரர்களை அதிபர் டோனல்ட் டிரம்ப் அனுப்பக்கூடும் என்ற பேச்சு எழுந்துள்ளது.
இதுகுறித்து பென்டகன் என்று அழைக்கப்படும் அமெரிக்கத் தற்காப்பு அமைச்சு கவலை தெரிவித்துள்ளது. ஏற்கெனவே ஆப்கானிஸ்தான், ரஷ்யா, ஈராக், சிரியா, ஈரான், சீனா, சோமாலியா, கொரிய தீபகற்பம் ஆகிய இடங்கள் தொடர்பான நிகழ்வுகள் பற்றியும் அவற்றை சமாளிப்பது குறித்தும் அமெரிக்கத் தற்காப்பு அமைச்சின் அதிகாரிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். அமெரிக்க ராணுவம் அரசியலுக்கு அப்பாற்பட்டது என்றும் அந்த நிலை தொடர வேண்டும் என்றும் ராணுவ உயர் அதிகாரி ஜெனரல் மார்க் ஏ. மில்லி தெரிவித்தார்.
“அதிபர் தேர்தல் தொடர்பாகப் பிரச்சினை எழுந்தால் அதை அமெரிக்க நீதிமன்றங்களும் நாடாளுமன்றமும் எதிர்கொள்ள வேண்டும். ராணுவத்தை அதில் சம்பந்தப்படுத்தக்கூடாது,” என்று அவர் கூறினார்.
இது ஒருபுறம் இருக்க, அதிபர் தேர்தலில் சர்ச்சை ஏற்பட்டு அதன் காரணமாக பொதுமக்களிடையே வன்முறைச் சம்பவங்கள் ஏற்பட்டால் அவற்றைக் கட்டுக்குள் கொண்டு வர ராணுவத்தை அனுப்புவது குறித்து அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
தேர்தலில் தோல்வி அடைந்தும் பதவி விலக அதிபர் டிரம்ப் மறுத்தால் பெரும் பிரச்சினை ஏற்படக்கூடும் என்று கூறப்படுகிறது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், அதிபர் டிரம்ப்பை அமெரிக்க ராணுவம் வலுக்கட்டாயமாக பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று முன்னாள் ராணுவ வீரர்கள் இருவர் தெரிவித்தனர். இதற்கு அமெரிக்கத் தற்காப்பு அமைச்சு கண்டனம் தெரிவித்துள்ளது.