கொவிட்-19 கிருமிப்பரவல் விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடு ஏற்பட்டுவர இக்கிருமியை சீனா வேண்டுமென்றே உலக நாடுகளுக்கு பரவ விட்டதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார்.
இந்த விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு சீனாவின் கைப்பாவையாக இருப்பதாகவும் திரு டிரம்ப் கூறினார். இந்தக் குற்றச்சாட்டை திண்ணமாக மறுக்கும் சீனா கொரோனா கிருமி விவகாரத்தில் மிகவும் வெளிப்படையாக நடந்து கொள்வதாகவும் கூறுகிறது.
“சீனாவின் இச்செயலை எப்போதும் மறக்க மாட்டோம். அவர்கள் அதை ஒருபோதும் அனுமதித்திருக்கக் கூடாது. இந்தக் கிருமி நம் நாட்டை தாக்குவதற்கு முன் எனது நிர்வாகம் மிகப்பெரிய பொருளாதாரத்தை உருவாக்கி இருந்தது” என்று திரு டிரம்ப் கூறினார்.
“தேர்தலில் என்னை வெற்றி பெறச் செய்தால் சீனா மீதான நம்பகத்தன்மையை முடிவுக்கு கொண்டுவருவேன். அடுத்த 4 ஆண்டுகளில் அமெரிக்காவை உலகின் உற்பத்தி வல்லரசாக மாற்றுவேன்.” என்று அவர் கூறினார்.