லண்டன்: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இங்கிலாந்தில் 16,000 கொவிட்-19 சம்பவங்கள் கணக்கில் கொள்ளப்படவில்லை என்ற தகவலை பிரிட்டிஷ் சுகாதாரத்துறை செயலாளர் மாட் ஹான்கோக் கூறியுள்ளார்.
மைக்ரோசாஃப்ட் எக்செல் மென்பொருள் அனுமதிக்கும் அளவைவிட அதிக அளவில் இருந்த கோப்பில் தரவுகள் இருந்ததால் 16,000 தரவுகள் விட்டுப்போனதாகக் கூறப்பட்டது.
இத்தகைய தவறு நேர்ந்திருக்கக்கூடாது என்று திரு ஹான்கோக் மக்களவையில் நேற்று முன்தினம் தெரிவித்தார்.
செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 2ஆம் தேதிக்கு உட்பட்ட காலகட்டத்தில் 15,841 கொவிட்-19 தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின. ஆனால், அவை நாட்டின் மொத்த தொற்று எண்ணிக்கையில் இந்த எண்ணிக்கை பிரதிபலிக்கப்படவில்லை. மேலும், அவர்களுக்கு தொற்று ஏற்பட்டதன் தொடர்பிலான தடங்களும் கண்டறியப்படவில்லை. அவர்களுடன் நெருக்கமாக இருந்தவர்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படவும் இல்லை.
ஆய்வகங்களில் இருந்து இங்கிலாந்தின் பொதுச் சுகாதார அமைப்புக்கு தானியக்க முறையில் கோப்புகள் மாற்றம் செய்யும்போது தவறு நேர்ந்திருப்பதாகக் கூறப்பட்டது. கடந்த சனிக்கிழமை இந்தப் பிரச்சினை கண்டுபிடிக்கப்பட்டு சரி செய்யப்பட்டதாகவும் இதன் தொடர்பிலான விசாரணை தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கொரோனா தொற்று கண்டவர்களுடன் தொடர்பில் இருந்ததே தெரியாமல் ஆயிரக்கணக்கானோர் இருந்திருப்பர் என்று இந்தச் சம்பவத்துக்கு தொழிலாளர் கட்சி ஆட்சேபம் தெரிவித்தது.