வரும் நவம்பர் மாதம் 3ஆம் தேதியன்று அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது.
அதிபர் வேட்பாளர்களான அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் அவரை எதிர்த்துப் போட்டியிடும் ஜனநாயக கட்சியின் ஜோ பைடனும் அண்மையில் தேர்தல் விவாதத்தில் ஈடுபட்டனர். அது வாக்குவாதத்தில் முடிந்தது.
இந்நிலையில், துணை அதிபர் வேட்பாளர்களான குடியரசுக் கட்சியின் மைக் பென்சும் ஜனநாயகக் கட்சியின் கமலா ஹாரிசும் நேற்று முன்தினம் விவாதித்தனர்.
இதில் கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிராக அதிபர் டிரம்ப் நடைமுறைப்படுத்தியுள்ள திட்டங்களை திருவாட்டி கமலா கடுமையாக விமர்சித்தார்.
அதிபர் டிரம்ப் எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்திருப்பதாக அவர் சாடினார்.
“இதற்கு முன் எந்த ஓர் அமெரிக்க அதிபரின் திட்டமும் இவ்வளவு மோசமான தோல்வியைச் சந்தித்ததில்லை. இத்தகைய அனுபவத்தை அமெரிக்கர்கள் சந்தித்ததில்லை,” என்று சால்ட் லேக் நகரில் உள்ள யூட்டா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விவாதத்தில் திருவாட்டி கமலா தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த திரு மைக் பென்ஸ், கொரோனா கிருமித்தொற்றுக்கு சீனாதான் காரணம் என்று குறைகூறினார். கிருமித்தொற்றுக்கு எதிரான அதிபர் டிரம்ப் எடுத்த நடவடிக்கைகளை அவர் பாராட்டினார். கடந்த ஜனவரி மாதத்திலிருந்து கிருமித்தொற்று தொடங்கிய நாடான சீனாவில் இருப்போருக்கு அதிபர் டிரம்ப் அமெரிக்காவுக்கு வர தடை விதித்ததை அவர் உதாரணம் காட்டினார்.
“அமெரிக்கர்களின் உடல் நலத்துக்கு அதிபர் டிரம்ப் முன்னுரிமை கொடுத்திருக்கிறார் என்பதை அமெரிக்கர்கள் புரிந்துகொள்ள வேண்டும்,” என்று திரு மைக் பென்ஸ் தெரிவித்தார்.
இதற்கிடையே, கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அதிபர் டிரம்ப், முழுமையாக குணமடையாவிடில் அடுத்த தேர்தல் விவாதத்தை ரத்து செய்ய வேண்டும் என்று திரு ஜோ பைடன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், திருவாட்டி கமலா ஹாரிசை அதிபர் டிரம்ப் 'அரக்கி' என்று நேற்று சாடினார். ஃபாக்ஸ் பிசினஸ் நியூசுக்கு நேற்று அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு இரு முறை குறிப்பிட்டார்.