எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் மலேசியாவின் அடுத்த பிரதமராவதற்கு ஆதரவு அளிக்க இருப்பவர்கள் என சமூக ஊடகங்களில் வெளியான 121 எம்.பி.க்கள் பட்டியலில் தங்களின் பெயரும் இடம்பெற்று இருந்ததை அடுத்து எம்.பி.க்கள் தரப்பிலிருந்து போலிசிடம் ஆறு புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, நேற்றுக் காலை 11 மணியளவில் அன்வாரிடம் விசாரணை நடத்த போலிஸ் திட்டமிட்டு இருந்தது. ஆனால், பின்னர் அவ்விசாரணை இன்னொரு நாளுக்குத் தள்ளிவைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
“நாளை (இன்று) காலை 9 மணிக்குத்தான் திரு அன்வாரால் வர முடியும் என்று அவருடைய தனிச் செயலாளர் தெரிவித்துவிட்டார். ஆகையால், இன்னொரு நாளில் அவரது வாக்குமூலம் பதிவுசெய்யப்படும். அது எப்போது என்று பின்னர் அறிவிக்கப்படும்,” என்று குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் ஹுசிர் கூறினார்.
முன்னதாக, பங்குச் சந்தைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள சில நிறுவனங்களுக்கும் தமக்கும் தொடர்பு இருப்பதாக வெளியான தகவலில் துளியும் உண்மையில்லை என்று 73 வயதான திரு அன்வார் மறுத்துள்ளார்.
இந்நிலையில், திரு அன்வார் இன்று மாமன்னரைச் சந்திக்க இருப்பதால் அரசியல் வட்டாரங்கள் பரபரப்படைந்துள்ளன. அடுத்த பிரதமராகத் தமக்குப் போதிய எம்.பி.க்களின் ஆதரவு இருப்பதாகவும் மாமன்னரைச் சந்திக்கும்போது ஆதரவு எம்.பி.க்களின் பட்டியலை ஒப்படைப்பேன் என்றும் பின்னர் அதைப் பொதுவெளியில் வெளியிடுவேன் என்றும் திரு அன்வார் கடந்த வாரம் கூறியிருந்தார்.
கடந்த முறை நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, மொத்தம் 222 எம்.பி.க்களில் 113 பேர் பிரதமர் முகைதீன் யாசினுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இதனிடையே, எம்.பி.க்கள் பட்டியல் தொடர்பில் மக்கள் பீதி அடைய வேண்டாம் என்று திரு ஹுசிர் கேட்டுக்கொண்டுள்ளார்.