பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள ஸ்பன் ஜமாத் பள்ளிவாசலில் உள்ள சமய பாடசாலையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் சிறுவர்கள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.
அந்தப் பாடசாலையில் இன்று காலை 80க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கல்வி பயின்று கொண்டிருந்தனர். காலை 8.30 மணியளவில் அந்தப் பள்ளிவாசலின் மையப்பகுதியில் திடீரென சக்திவாய்ந்த குண்டு வெடித்தது.
அதிர்ச்சியடைந்தன சிறுவர்கள் பள்ளிவாசலை விட்டு வெளியே தப்பியோடினர். ஆனாலும், இந்த பயங்கர குண்டு வெடிப்பு சம்பவத்தில் சிறுவர்கள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். 70க்கும் அதிகமான சிறுவர்கள் படுகாயமடைந்தனர்.
சம்பவத்தில் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக போலிசார் அனுப்பி வைத்தனர்.
அந்தப் பள்ளிவாசலுக்குள் ஒருவர் ஒரு பெரிய பையைத் தூக்கிச் சென்றதாகவும் வெடிப்பு நிகழ்வதற்கு முன்பே அந்த நபர் அங்கிருந்து சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த வெடிப்புச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.