அஸ்ட்ராஸெனிகா மற்றும் ஃபைசர் நிறுவனங்களிடம் இருந்து இந்தோனீசியா 100 மில்லியன் தடுப்பு ஊசி மருந்துகளை வாங்குவதற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளது.
ஜனவரி முதல் வாரத்தில் அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்படும் என்று கூறப்படுகிறது. தடுப்பு மருந்துகள் அடுத்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இருந்து படிப்படியாகத் தருவிக்கப்படும் என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
முன்னதாக இந்தோனீசியா, சீனாவின் பயோஃபார்மசிடிக்கல் நிறுவனத்திடம் இருந்து 125 மில்லியன் சினோவக் தடுப்பு ஊசி மருந்துகளையும், அமெரிக்காவின் நோவாவேக்ஸ் நிறுவனத்திடம் இருந்து 50 மில்லியன் மருந்துகளையும் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்திருந்தது.
அதன்படி முதல்கட்டமாக டிசம்பர் 6ஆம் தேதி 1.2 மில்லியன் சினோவக் மருந்துகள் ஜகார்த்தா வந்து சேர்ந்தது. மேலும் 1.8 மில்லியன் மருந்துகள் ஜனவரி மாதத்திற்குள் கிடைத்துவிடும். நோவாவேக் மருந்து 2021 ஜூன் மாதத்தில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு இதுவரையிலும் 21,000 பேர் கொரோனாவுக்குப் பலியாகிவிட்டனர். 727,000 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.