வாஷிங்டன்: உளவுத்துறை ஆலோசனைகளை முன்னாள் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் பெறக்கூடாது என்று தாம் நம்புவதாக அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
டிரம்ப்பின் நிலையற்ற போக்கு மட்டுமல்லாமல் அந்தத் தகவல்களை அவர் பகிரக்கூடும் என்ற அக்கறையின் காரணமாக அவ்வாறு தாம் நம்புவதாக வெள்ளிக்கிழமை ‘சிபிஎஸ்’ ஊடகம் நடத்திய நேர்காணலின்போது அதிபர் பைடன் தெரிவித்தார்.
வழக்கமாக முன்னாள் அமெரிக்க அதிபர்கள் தங்களின் பதவிக்காலம் முடிந்தபின்னரும் உளவுத் துறை ஆலோசனைகள் சிலவற்றைப் பெறுவர்.
தமது பதவிக்காலத்திலேயே உளவுத் துறையினரின்மீது டிரம்ப் அடிக்கடி நியாயமற்ற குற்றச்சாட்டுகளை வைத்துள்ளதாகவும் அவர் நீண்ட ஆலோசனைகளைப் பெற்றதில்லை என்றும் ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டதை உளவுத் துறையினர் அறிந்தும் அந்தத் தகவலை ஏற்க மறுத்தார் திரு டிரம்ப்.