குழந்தை பெற்றுக்கொள்வதன் தொடர்பில் விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாட்டை சீனா தளர்த்தியபோதிலும் அதற்கான பலன் அந்நாட்டுக்குக் கிட்டவில்லை.
கடந்த ஆண்டு முழுமைக்கும் பதிவான குழந்தை பிறப்பு விகிதம் அதற்கு முந்திய ஆண்டைக் காட்டிலும் மூன்றில் ஒரு பங்கு குறைவு.
2019ஆம் ஆண்டு முழுமைக்கும் 14.65 மில்லியன் குழந்தைகள் பிறந்ததாகப் பதிவு செய்யப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 10.04 மில்லியன் ஆனது. இது கிட்டத்தட்ட 30 விழுக்காடு குறைவு.
மேலும், தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக பிறப்பு விகிதம் குைறந்து வந்துள்ளது.
சீனாவில் பதிவு செய்யப்பட்ட குழந்தை பிறப்பு விகிதம் உண்மையான குழந்தை பிறப்பு விகிதத்தைக் காட்டிலும் குறைவாகவே இருக்கும்.
காரணம், எல்லா பெற்றோர்களும் தங்களது குழந்தை பிறப்பைப் பதிவு செய்வதில்லை. ஒரு பிள்ளை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற விதி சீனாவில் நீண்ட காலமாக இருந்து வந்தது.
ஆனால், மக்கள்தொகை வேகமாக மூப்படைந்து வருவதாலும் அதன் மூலம் ஊழியரணி சுருங்கும் என்ற அச்சத்தாலும் 2016ஆம் ஆண்டு சீன அரசாங்கம் ஒரு குழந்தை விதியைத் தளர்த்தியது.
ஒவ்வொரு குடும்பமும் இரு பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. இருந்த போதிலும் பிறப்பு விகிதம் சரிந்தவாறே தொடர்கிறது.