யேல் பல்கலைக்கழக மாணவரை சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டின் பேரில் மசாச்சூசெட்ஸ் தொழில்நுட்பக் கழக (MIT) மாணவர் ஒருவரை போலிசார் தேடி வருகின்றனர்.
பான் சின்சுவான் எனும் மாணவரைக் கைது செய்வதற்கான ஆணை வைத்திருப்பதாக தி நியூ ஹேவன் காவல் துறை தனது ஃபேஸ்புக் பதிவில் நேற்று (பிப்ரவரி 27) தெரிவித்திருந்தது. நாளை கூடுதல் விவரங்கள் வெளியிடப்படக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சியாட்டலைச் சேர்ந்த 26 வயதான கெவின் ஜியாங் எனும் யேல் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் துறை மாணவர் அவரது காருக்கு வெளியே இம்மாதம் 6ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். நியூயார்க் நகரின் வடகிழக்குப் பகுதியில் 130 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள மதிப்புமிக்க ஐவி லீக் பள்ளி வளாகத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
சீனாவின் ஷங்ஹாய் பகுதியைச் சேர்ந்த பான் MITயின் மின்னியல் பொறியியல் மற்றும் கணினி அறிவியல் துறையில் மாணவராகச் சேர்ந்திருந்தார் என்று கூறப்பட்டது.
அவர் மசாச்சூசெட்சில் உள்ள மால்டென் எனும் பகுதியில் வசித்து வந்ததாகவும் பிப்ரவரி 11ஆம் தேதி தம் குடும்பத்தாருடன் ஜார்ஜியாவில் உள்ள புரூக்ஹேவன் பகுதியில் காரில் சென்றதை சிலர் பார்த்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இந்தக் கொலைக்கான காரணம் குறித்து போலிசார் எதுவும் தெரிவிக்கவில்லை.
ஜியாங்கின் வருங்கால மனைவி பெர்ரி வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் இந்த கொலைச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. திருவாட்டி பெர்ரியும் யேல் பல்கலைக்கழக மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.