யங்கூன்: மியன்மாரில் நடந்த ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பை எதிர்த்து நாடெங்கும் தொடர்ந்து பல ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன.
ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க பாதுகாப்புப் படையினர் மூர்க்கத்தனமான அணுகுமுறை
களைக் கையாள்வதால் பல
உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இதுவரை மரணமடைந்தோர் எண்ணிக்கை 700ஐ தாண்டி
உள்ளது.
பொதுமக்கள் மீது மியன்மார் ராணுவத்தால் கட்டவிழ்க்கப்படும் வன்முறையை உலக நாடுகள் மிகக் கடுமையாகச் சாடுகின்றன.
இருப்பினும், இப்பிரச்சினைக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை.
நேற்று காலை மாண்டலேயில் ராணுவத்துக்குச் சொந்தமான
வங்கிக்கு வெளியே வெடிகுண்டு வெடித்ததில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் மாண்டார்.
மியன்மார் ராணுவத்துடன் ஒத்துழைக்க வேண்டாம் என்ற அழைப்புக்கு இணங்க, அந்த வங்கியில் பணம் போட்டவர்கள், போட்ட பணத்தை வெளியெடுத்து வருகின்றனர்.
இதனால் ராணுவத்துக்குச் சொந்தமான வங்கிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 82 ஆர்ப்பாட்டக்காரர்கள் மாண்டதாக கண்காணிப்புக் குழு ஒன்று தெரிவித்தது.
பாகோ நகரில் காயமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு மருத்துவ உதவி மறுக்கப்பட்டதாக மியன்மாரில் உள்ள ஐநா
அலுவலகம் டுவிட்டரில் பதிவிட்டது. இதற்கிடையே, மியன்மார் ராணுவம் இணையச் சேவையை முடக்கியுள்ளது. இருப்பினும், மியன்மார் இளையர்கள் துவண்டு விடாமல் ராணுவத்தின் மூர்க்கத்தனமான அடக்குமுறையை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் நோக்கில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து வருகின்றனர்.