ஹாங்காங்: சீனாவில் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட இளையர் ஒருவர், ஹாங்காங் திரும்பியதும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.
தீ மூட்ட முயற்சி செய்ததாகவும் அபாயகரமான ஆயுதங்களை வைத்திருந்ததாகவும் அந்த இளையர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் படகு மூலம் தைவான் தப்பிச் செல்ல முயற்சி செய்த 12 பேரை சீன அதிகாரிகள் நடுக்கடலில் மடக்கிப் பிடித்தனர்.
அவர்களில் 17 வயது ஹோயங் லாம் புக்கும் ஒருவர். அதன் பின்னர் அவர் எங்கு உள்ளார் என்பது யாருக்கும் தெரியவில்லை. சீனா அல்லது ஹாங்காங்கில் உள்ள சிறையில் அவர் அடைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப் பட்டது. இந்த நிலையில் சீனாவில் சிறையிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆனால் ஹாங்காங் திரும்பியதும் அவர் உடனே பயிற்சி நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
ஹாங்காங்கில் 14 முதல் 20 வயதுக்குட்பட்ட இளையர்கள் சிறைக்குப் பதிலாக பயிற்சி நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அங்கு இளம் குற்றவாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டு வர்த்தகம் போன்ற துறைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஆறு மாதம் முதல் மூன்று ஆண்டுகள் வரை இளையர்கள் அங்கு தடுத்து வைக்கப்படலாம்.
இளையர்களின் நடத்தையைப் பொறுத்து அவர்களை விடுவிப்பது குறித்து அதிகாரிகள் முடிவு செய் கின்றனர்.
தீ மூட்டும் முயற்சியில் ஈடுபட்டதையும் ஆயுதம் வைத்திருந்ததையும் ஹோயங் ஒப்புக்கொண்டுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு ஹாங்காங்கில் நடந்த ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டங்களின்போது ஹோயங் குற்றச்செயல்களைப் புரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
மாவட்ட நீதிபதி ஃபிராங்கி இயூ, சட்டத்தை மதிக்காமல் பொறுப்பற்ற முறையில் ஹோயங் நடந்துகொண்டதாகக் கூறினார்.
ஆனால் குற்றங்களை ஒப்புக்கொண்ட அவரது நேர்மையை நீதிபதி கவனத்தில் எடுத்துக்கொண்டார்.