பெய்ஜிங்: சீனாவின் ஹுவாவெய் தொழில்நுட்ப நிறுவனத்தின் தொடர்பில் அந்நாட்டிற்கும் கனடாவிற்கும் இடையே ஏற்பட்ட அரசதந்திர பூசல் ஒரு முடிவுக்கு வருவது போல் தெரிகிறது. கனடாவில் கைதான ஹுவாவெய் நிறுவனரின் மகளும் அந்நிறுவனத்தின் நிர்வாகியுமான திருவாட்டி மெங் வாங்சூ விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சீனாவில் பிடித்துவைக்கப்பட்ட இரண்டு கனடியர்களும் விடுவிக்கப்பட்டனர்.
திருவாட்டி மெங் விடுவிக்கப்பட்ட சில மணிநேரத்திற்குப் பிறகு கனடாவின் மைக்கல் ஸ்பெவர், மைக்கல் கொவ்ரிக் ஆகியோர் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. திருவாட்டி மெங் கைதான அதே ஆண்டில் உளவு வேலை பார்த்ததாகச் சொல்லி சீனா இருவரையும் பிடித்து வைத்தது.
அமெரிக்கா பிறப்பித்த கைதாணையைக் கொண்டு 2018ஆம் ஆண்டில் திருவாட்டி மெங் கைதுசெய்யப்பட்டார்.
திருவாட்டி மெங்கைக் கைதுசெய்ததற்குப் பதிலடியாக கனடியர்களைப் பிடித்துவைத்ததாகச் சொல்லப்படுவதை பெய்ஜிங் மறுத்து வந்துள்ளது.
ஆனால் இந்நடவடிக்கையின் மூலம் சீனா அரசியல் ரீதியாக பேரம் பேசுவதாகக் கவனிப்பாளர்கள் கூறி வருகின்றனர்.
மைக்கல் ஸ்பெவர், மைக்கல் கொவ்ரிக் ஆகிய இருவரும் தாங்கள் எந்தத் தவறும் இழைக்கவில்லை எனத் தொடர்ந்து கூறி வந்துள்ளனர்.
இருவரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிலான சவால்களை எதிர்நோக்கியிருப்பதாகக் கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ருடோர் சொன்னார்.
நேற்று காலை அவர்கள் கனடாவைச் சென்றடையவிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
திரு கொவ்ரிக், ஒரு முன்னாள் தூதர். திரு ஸ்பெவர், வடகொரியாவுடனான கலாசார உறவுகளுக்கு வகைசெய்வது போன்ற விவகாரங்களைக் கையாளும் ஒரு நிறுவனத்தை நிறுவியவர்களில் ஒருவர்.
ஈரானில் ஹுவாவெய் நிறுவனம் கையாண்ட வர்த்தக விவகாரங்களின் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டபோது அமெரிக்க அதிகாரிகளைத் திசை திருப்பியதை விடுவிக்கப்படுவதற்கு முன் திருவாட்டி மெங் ஒப்புக்கொண்டார். கடந்த மூவாண்டுகளாக அவர் கனடாவில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.