கோலாலம்பூர்: அனைத்துலகப் பயணிகளுக்கு மலேசியா அதல் எல்லைகளை மீண்டும் திறக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, சிங்கப்பூருடனான எல்லையை மலேசியா விரைவில் திறக்கக்கூடும் என்றும் அதையடுத்து சிங்கப்பூரிலிருந்து பயணிகள் மலேசியாவுக்குப் பயணம் மேற்கொள்ளலாம் என்றும் மலேசிய சுற்றுப்பயணத்துறை, கலைகள், கலாசார அமைச்சர் நேன்சி ஷுக்ரி தெரிவித்துள்ளார்.
இரு அண்டை நாடுகளுக்கு இடையிலான எல்லைகளை மீண்டும் திறப்பது குறித்து கலந்துரையாட அமைச்சர் நேன்சி ஷுக்ரி அடுத்த வாரம் சிங்கப்பூர் அதிகாரி களைச் சந்திக்க இருக்கிறார். சிங்கப்பூர்-மலேசியா எல்லை அடுத்த மாதம் மீண்டும் திறக்கப்படும் என்று அவர் கூறினார்.
அனைத்துலக பயணிகளுக்குத் தனது எல்லைகளை அடுத்த மாதம் மீண்டும் திறந்துவிட மலேசியா இலக்கு கொண்டுள்ளது. மலேசியாவுக்குள் சிங்கப்பூர் பயணிகள் முதலில் அனுமதிக்கப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசியர்களுக்கு சிங்கப்பூர் அதன் எல்லைகளைத் திறந்துவைத்தால், நாங்களும் எங்கள் எல்லைகளை சிங்கப்பூரர்களுக்குத் திறந்து வைத்திருப்போம்," என்று சிஎன்பிசி செய்தி நிறுவனத்திடம் அமைச்சர் நேன்சி தெரிவித்தார்.
கொவிட்-19 நெருக்கடிநிலைக்கு முன்பு ஒவ்வொரு நாளும் சிங்கப்பூரையும் மலேசியாவையும் இணைக்கும் உட்லண்ட்ஸ் பாலத்தையும் துவாஸ் பாலத்தையும் பலர் வேலை நிமித்தமாகவும் குடும்பத்தினரைச் சந்திக்கவும் கடந்தனர்.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் எல்லைகள் மூடப்படுவதற்கு முன்பு, சிங்கப்பூருக்கும் ஜோ
கூருக்கும் இடையே ஒவ்வொரு நாளும் இருநாடுகளையும் சேர்ந்த ஏறத்தாழ 500,000 பேர் பயணம் செய்தனர்.
எல்லைகள் மூடப்பட்டதும் சொந்த நாடு திரும்ப முடியாமல் 100,000க்கும் மேற்பட்ட மலேசியர்கள் சிங்கப்பூரில் இருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
எல்லைக்கு அந்தப் பக்கம் உள்ள தங்கள் குடும்பத்தினருடன் மீண்டும் இணைய அவர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
அவ்வப்போது பயணம் செய்யும் ஏற்பாட்டிக்கீழ் தற்போது இருநாடுகளுக்கும் இடையே பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அன்புக்குரியவர்கள் மரணம் அடைந்தாலோ அல்லது கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலோ இத்திட்டத்தின்கீழ் பயணம் செய்யலாம்.
முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட மலேசியர்கள் லங்காவி தீவுக்குச் செல்ல மலேசிய அரசாங்கம் கடந்த மாதம் அனுமதி அளித்தது.
அதையடுத்து, இம்மாதம் 16ஆம் தேதி நிலவரப்படி 128,000க்கும் அதிகமானோர் லங்காவிக்கு விமானம் மூலமாகவோ அல்லது படகு மூலமாகவோ பயணம் மேற்கொண்டதாக திருவாட்டி நேன்சி தெரிவித்தார்.
இம்மாதம் 11ஆம் தேதியன்று மாநிலங்களுக்கிடையிலான பயணத் தடையை மலேசியா நீக்கியது.
தடுப்பூசி போட்டுக்கொண்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் பொருளியலை உயிர்ப்பிக்கும் நடவடிக்கைகளில் அது தீவிரம் காட்டி வருகிறது.
தற்போது பதின்மவயதினருக்கு தடுப்பூசியையும் முதியோர் போன்ற பாதிப்படையும் அபாயம் அதிகமுள்ள பிரிவினருக்கு பூஸ்டர் தடுப்பூசியையும் மலேசியா போட்டு வருகிறது.
நேற்றைய நிலவரப்படி மலேசியாவில் மேலும் 5,828 கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.