கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், 1எம்டிபி தொடர்பான வழக்குகளில் தனது ஆதாரங்களை மறைக்க முன்னைய பக்கத்தான் ஹரப்பான் நிர்வாகம் மேற்கொண்ட முயற்சிகளை விசாரிக்க வேண்டும் என்று நேற்று போலிசில் புகார் அளித்துள்ளார்.
இந்த வழக்கில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரின் குடும்பத்துக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரிக்கப்படாததால் தாம் ஏமாற்றம் அடைந்துள்ள தாகவும் அவர் தெரிவித்தார்.
டேங் வாங்கி போலிஸ் நிலையத்தில் நேற்று புகார் அளித்த பிறகு நஜிப் செய்தியாளர்களிடம் பேசினார்.
சிங்கப்பூர் அதிகாரிகளால் திருப்பியளிக்கப்பட்ட ஜோ லோ மற்றும் 1எம்டிபியுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் 65 மில்லியன் ரிங்கிட் விவகாரத்தில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரின் நெருங்கிய குடும்பத்துக்கு சில தொடர்புகள் இருப்பதாக கடந்த வாரம் ஊழல் தடுப்புப் பிரிவு கூறியிருந்தது.
இதனைச் சுட்டிக்காட்டிய அவர், மலேசியர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாகக் கூறினார்.
"ஜோ லோவுடன் ஆளுநருக்கு இருந்த தொடர்பு பற்றியோ அல்லது நான் பிரதமராக இருந்தபோது அவரை முழுமையாக நம்பிய சமயத்தில் அவர்களுக்கு இடையிலான தொடர்பு பற்றியோ விசாரிக்கப்படாதது என்னைவிட வேறு யாரும் ஏமாற்றமடைய முடியாது.
"முன்னாள் தலைமைச் சட்ட அதிகாரியான டாமி தாமசும் தாம் பதவியில் இருந்தபோது அவர்களுக்கு இடையிலான பரிவர்த்தனைகள் குறித்து தனக்குத் தெரியும் என்று கூறியிருப்பது மேலும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
"முந்தைய பக்கத்தான் ஹரப்பான் நிர்வாகத்தில் குறைந்தது 2019ஆம் ஆண்டிலிருந்து போலிசாருக்கு இது குறித்து தெரியும். ஆனால் கிட்டதட்ட 2021 இறுதி வரை இந்த விவகாரத்தில் விசாரணை நடைபெற்று வருவதாக கடந்த திங்கள்கிழமை சட்ட அமைச்சர் வான் ஜுனைடி நாடாளு மன்றத்தில் கூறி இருந்தார்.
"இத்தகைய தகவல்கள் எனக்குத் தெரியாமல் இருந்தன. முன்பே தெரிந்திருந்தால் எனக்கு எதிரான வழக்குகளில் தற்காப்பு வாதத்திற்கு என்னுடைய சட்டக் குழுவினர் அதை பயன்படுத்தியிருக்கலாம்," என்றார் திரு நஜிப். தன்னுடைய ஆதாரங்களை மறைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை போலிசார் விசாரிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.