புத்ராஜெயா: நாட்டில் உள்ள விமான நிறுவனங்கள் அரசாங்கத்தின் தலையீடு இல்லாமல் கட்டணங்களைக் குறைக்க வேண்டும் என்று மலேசிய போக்குவரத்து அமைச்சர் வீ க சியோங் நேற்று வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவு வழியாக கேட்டுக் கொண்டார்.
தற்போதைய விமானப் பயணங் களுக்கான கட்டணம், குறிப்பாக சரவாக்குக்கான கட்டணம் பயணி களுக்கு பெரும் சுமையாக இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
இவ்வாண்டு இறுதியிலும் அடுத்த ஆண்டு முற்பகுதியிலும் வரும் விடுமுறைக் காலத்தில் விமானப் பயணக் கட்டணங்கள் அதிகமாக இருக்கும் என்று பயனீட்டாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது அரசாங்கத்திற்கும் கவலையளிக்கிறது. கொள்ளைநோய் காரணமாக நீண்டகாலத்திற்குப் பிறகு குடும்பத்துடன் இணையும் பயணிகளை கட்டண உயர்வு வெகுவாகப் பாதிக்கும்," என்று அமைச்சர் கூறினார்.
சரவாக்கில் உள்ள அரசாங்க சார்பற்ற அமைப்புகளும் விமான நிறுவனங்களின் அதிகப்படியான கட்டணம் குறித்து அண்மையில் கவலை எழுப்பியிருந்தன.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண விமான நிறுவனங்களுடன் அரசாங்கம் ஆலோசனை நடத்தியுள்ளது.
மலேசிய ஏர்லைன்ஸ், ஏர் ஏஷியா, மலிண்டோ ஆகியவற்றுடன் நடந்த கூட்டத்தில் கட்டணத்தைக் குறைக்க வலியுறுத்தப்பட்டது.
மலேசிய ஏர்லைன்ஸ் சரவாக்குக்கு கூடுதல் சேவைகளை வழங்க உறுதியளித்துள்ளது. இதனால் கட்டணங்கள் குறைய வாய்ப்புள்ளது. மலேசிய விமானப் போக்கு வரத்து ஆணையமும் கூடுதல் சேவைகளுக்கு ஒப்புதல் வழங்கத் தயாராக உள்ளது என்று திரு வீ தெரிவித்தார்.
கொள்ளைநோயால் ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுசெய்வதற்காக கட்டணம் உயர்த்தப்படுவதாக பரவலாக மக்கள் நம்புகின்றனர். அவற்றைப் போக்கும் வகையில் விமானத் துறையினர் கட்டண உயர்வுகளைத் தவிர்க்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.