கோலாலம்பூர்: மலேசியாவில் பெய்த கனமழை காரணமாக தங்களின் வீடுகளைவிட்டு வெளியேறிய பலர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் ஒரு சில இடங்களில் வெள்ளத்தைவிட்டு வெளியேற முடியாமல் சிலர் தவித்தனர்.
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஆடவர் ஒருவர் வெள்ள நீரால் சூழப்பட்ட வீட்டிற்குள் தவிப்பது, தாயும் பிள்ளையும் காரின் பின்புறத்தில் மீட்புக் குழுவினருக்காக காத்துக்கொண்டிருப்பது போன்ற இணையத்தில் பகிரப்பட்டுள்ள படங்கள் மலேசிய வெள்ளத்தில் சிக்கித் தவிப்பவர்களின் நிலையைக் காட்டுகின்றன.
வெள்ளம் சூழ்ந்துள்ள ஹுலு லங்காட்டில் உள்ள தாமன் ஸ்ரீ நன்திங் பகுதியைச் சேர்ந்த மீட்புக் குழுவினரின் உதவிக்காக காத்துக் கொண்டிருந்த கிட்டத்தட்ட 100 பேர், 12 மணி நேரத்திற்கும் மேல் வழிபாட்டுத் தலத்தின் மேற்கூரையில் சிக்கித் தவித்தனர்.
இதற்கிடையே, மனதை நெகிழ வைக்கும் சம்பவங்களும் அரங்கேறின.
வெள்ளம் சூழ்ந்த தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறி பல கிலோ மீட்டர் நடந்துசென்ற நால்வரைக் காரில் சென்ற ஒருவர் அழைத்துச் சென்ற காணொளியும் சமூக ஊடகத்தில் பகிரப்பட்டிருந்தது.
உணவு விநியோக பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர் ஏழு பூனைகளைக் காப்பாற்றிய சம்பவமும் பலரின் கவனத்தையும் ஈர்த்தது.
இதற்கிடையே, வெள்ள பாதிப்பு சீரமைப்பு பணிகளுக்காக 200 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 1,000 ரிங்கிட் நிதி உதவி வழங்கப்படும் என்றார் மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்.