வெலிங்டன்: நியூசிலாந்தில் ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர், தனிமைப்படுத்தப்படாமல் வழக்கமான பணிகளில் ஈடுபட்டதால் சமூகத்தில் ஓமிக்ரான் கிருமி பரவியிருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இம்மாதம் 16ஆம் தேதி பிரிட்டனிலிருந்து அவர் நியூசிலாந்துக்கு வந்தார். இரண்டு நாள்களுக்குப் பிறகு அதாவது, டிசம்பர் 17ஆம் தேதி நடந்த சோதனையில் அவருக்கு ஓமிக்ரான் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக நியூசிலாந்தின் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
அந்த இடைப்பட்ட காலத்தில் அவர் ஆக்லாந்தில் இருந்துள்ளார். ஆனால் அவர் மூலம் தொற்று பரவியிருக்கலாம் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
நியூசிலாந்தில் இதுவரை சமூகத்தில் ஓமிக்ரான் தொற்று ஏற்பட வில்லை. எல்லையில் உள்ள தனிமைப்படுத்தப்படும் இடங்களில் மட்டும் 17 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதற்கிடையே ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,201 கொவிட்-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
முன்னைய நாளுடன் ஒப்பிடுகையில் இது 87 விழுக்காடு அதிகம். மருத்துவமனைகளில் நோயாளிகள் அதிகரித்து வருவதால் சுகாதாரக் கட்டமைப்பு பாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. சோதனை நிலையங்களுக்கும் தேவை அதிகரித்துள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் மாநில முதல்வர் டொமினிக் பேராட்டெட், பெரியவர்களில் ஏறக்குறைய 95 விழுக்காட்டினர் முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளதால் மருத்துவமனைகள் நிரம்ப வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ளார்.
நியூ சவுத் வேல்ஸ் மருத்துவ மனையில் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட 625 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
"நம்பிக்கையளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னைய டெல்டா கிருமியுடன் ஒப்பிடுகையில் ஓமிக்ரான் பாதிப்பு ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன," என்று திரு டொமினிக் தெரிவித்து உள்ளார்.
கிருமிப் பரவலைக் குறைக்க மாநிலத்தை முடக்க ேவண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் சொன்னார்.
இதற்கிடையே பிரதமர் ஸ்காட் மோரிசன் உள்பட ஆஸ்திரேலியாவின் எட்டு மாநில முதல்வர்கள் இன்று கிருமிப்பரவல் நிலவரம் குறித்து விவாதிக்கவிருக்கின்றனர்.
அப்போது, புதிய கட்டுப்பாடுகள் விதிக்காமல் கிருமிப் பரவலை எப்படி சமாளிப்பது என்பது குறித்து அவர்கள் பேசுவார்கள் எனத் தெரிகிறது.
பெரும்பாலான மாநிலங்கள், கிருமியுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு மாறி வருகின்றன. கிருமிப் பரவலைத் தடுக்க தடுப்பூசி ஒன்றே சிறந்த வழி என்றும் ஆஸ்திரேலிய மாநில அரசாங்கங்கள் நம்புகின்றன.