லண்டன்: ஓமிக்ரான் உருமாறிய கிருமித் தொற்று வேகமாக பரவி வருவதால், ஏற்கெனவே கிருமித்தொற்றுக்கு ஆளானோருக்கு மீண்டும் தொற்று ஏற்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
கடந்த வாரம் ஓமிக்ரான் தொற்றுக்கு ஆளானவர்களில் 10 முதல் 15 விழுக்காட்டினர் ஏற்கெனவே வேறு வகை கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு ஆளானவர்கள் என்று லண்டன் இம்பீரியல் கல்லூரியின் தொற்றுநோய் துறை நிபுணரான பேராசிரியர் நீல் பெர்குசன் சொன்னார்.
ஆனால், இதுவரை யாரும் இரண்டு முறை ஓமிக்ரான் உருமாறிய கிருமியால் பாதிக்கப்பட்டதற்கான சான்றுகள் எதுவும் இல்லை என்று கூறப்பட்டு
உள்ளது.
ஆனால் ஓமிக்ரானின் வேகமாகப் பரவும் தன்மை, நோய் எதிர்ப்பு திறனைக் குறைக்கும் தன்மை ஆகியவற்றின் காரணமாக மீண்டும் ஒரே வகை கிருமித் தொற்றுக்கு ஆளாவதற்கான வாய்ப்பு உள்ளதாக சுகாதார அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்
தற்போதைய காலக்கட்டத்தில், ஒரே சமயத்தில், ஓமிக்ரானாலும் இன்னோர் உருமாறிய கிருமியாலும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது குறித்தும் அவர்கள் கவலை கொண்டுள்ளனர்.
இதற்கிடையே, அமெரிக்காவில் ஒரே நாளில் 1.35 மில்லியன் பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். உலகளவில் எந்தவொரு நாட்டையும்விட ஆக அதிக அன்றாட தொற்று எண்ணிக்கையாகும் இது.
ஜனவரி 3ஆம் தேதியன்று அங்கு 1.03 மில்லியன் தொற்று சம்பவங்கள் பதிவானதே ஆக அதிகமாக இருந்தது.
ஏழு நாள் சராசரி இரண்டு வாரங்களில் மும்மடங்காகியுள்ளது அமெரிக்காவில் கிருமித்தொற்று தற்போதைக்கு குறைவதாக தெரியவில்லை என்பதைக் காட்டுகிறது.
உலக அளவில் கிருமித்தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை உச்சத்தை எட்டியுள்ளது.
அமெரிக்காவில் கிருமித்தொற்றுக்குச் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை ஆக அதிகமாக 132,000க்கும் மேல் பதிவானது.
பிரான்சில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை கடந்த ஆண்டு ஏப்ரலுக்குப் பிறகு தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது.
ஸ்பெயினிலும் கடந்த ஆண்டைப் போன்று மருத்துவமனை களில் நெருக்கடி நிலை திரும்பும் என அஞ்சப்படுகிறது.