கிருமிப் பரவல் குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
ஜெனிவா: ஓமிக்ரான் கிருமி ஆபத்தானது என்று கூறியுள்ள உலகச் சுகாதார நிறுவனம், குறிப்பாக, தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கு ஆபத்துமிக்கது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெல்டாவைவிட வேகமாக பரவக்கூடிய ஓமிக்ரான் கிருமிப் பரவல் காரணமாக உலகளவில் கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரித்து உள்ளதாக கூறியது.
உலகம் முழுவதும் கடந்த வாரம் 15 மில்லியனுக்கும் மேற்பட்ட தொற்று சம்பவங்கள் பதிவாகின. அத்துடன் மில்லியன்கணக்கான தொற்று சம்பவங்கள் பதிவு செய்யப்படாமல் போயிருக்கக்கூடும் என்றும் கருதப்படுகிறது.
கொவிட்-19 கிருமித்தொற்றை நிரந்தரநோயாக கையாளுவதற்கான வழியாக இது இருக்கும் என்ற கருத்தை நிராகரித்த நிறுவனம், கிருமித்தொற்றை முழுவதுமாக ஏற்றுக்கொண்டுவிடக்கூடாது என்றும் வலியுறுத்தியது.
"ஓமிக்ரான், டெல்டாவைவிட குறைவான பாதிப்பையே ஏற்படுத்தினாலும் அது ஆபத்தானது அதுவும் குறிப்பாக, தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கு.
"உலகளவில் பலர் இன்னமும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத நிலையில், கிருமிப் பரவுவதற்கு நாம் இடம் தரக்கூடாது.
"மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானோர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள்," என்றார் உலகச் சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம்.
இதற்கிடையே, அமெரிக்காவில் தீவிர சிகிச்சை தேவைப்படும் பதின்ம வயதினர்களில் கிட்டத்தட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் என்கிறது ஆய்வு ஒன்று.
12 முதல் 18 வயதுக்குட்பட்ட 1,000க்கும் மேற்பட்ட பதின்ம வயதினரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் தடுப்பூசி, தீவிர சிகிச்சை தேவைப்படுவோர் விகிதத்தை 98 விழுக்காடும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் விகிதத்தை 94 விழுக்காடும் குறைத்ததாக நியூ இங்கிலாந்து மருத்துவ சஞ்சிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது தயாரிப்பான வேக்ஸ்ஸெவேரியா தடுப்பூசி, ஓமிக்ரானுக்கு எதிராக அதிக ஆன்டிபாடிகளை உருவாக்குவதாக மருத்துவ பரிசோதனையின் முதற்கட்ட தரவுகள் கூறுவதாக ஆஸ்ட்ராஸெனிக்கா தெரிவித்தது.
மூன்றாவது தடுப்பூசியாக அதைப் போட்டுக்கொள்ளும்போது, ஓமிக்ரான் மட்டுமல்லாமல், மற்ற உருமாறிய கிருமிக்கு எதிராக அதிக ஆன்டிபாடிகளை உருவாக்குவதாக அது கூறியது.