வெலிங்டன்: கடலுக்கடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பால் பேரழிவைச் சந்தித்த டோங்காவில் நீருக்கும் உணவுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது.
அங்கு அவசர உதவிக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த சில நாட்களில், நிவாரணப் பொருட்களுடன் மேலும் பல கப்பல்களும் விமானங்களும் அங்கு சென்றடையும் என்று கூறப்பட்டுள்ளது.
நிவாரணப் பொருட்களுடன் சென்ற ஆஸ்திரேலியா, நியூசிலாந்து விமானங்கள் நேற்று முன்தினம் டோங்காவைச் சென்றடைந்தன.
அதில் அவசியத் தேவையான தண்ணீர், தங்கு முகாம் பொருள்கள், தகவல் தொடர்பு சாதனங்கள், மின் உற்பத்தி ஜெனரேட்டர்கள் போன்றவை கொண்டு செல்லப்பட்டன.
இதையடுத்து, 250,000 லிட்டர் தண்ணீருடன் நியூசிலாந்து கடற்படைக் கப்பல் ஒன்று நேற்று டோங்கா சென்றடையவிருந்தது.
மேலும் அக்கப்பல் உப்புநீரைக் குடிநீராக்கும் ஆலை மூலம் நாளொன்றுக்கு 70,000 லிட்டர் தண்ணீரைச் சுத்திகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வாரத்தில் மேலும் பல நிவாரணப் பொருட்களுடன் ஆஸ்திரேலிய கப்பல் டோங்கா சென்றடையும் என்று டோங்காவில் உள்ள ஆஸ்திரேலிய தூதரகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, வியாழக்கிழமையன்று நிவாரணப் பொருட்களைக் கொண்டு சென்ற ஆஸ்திரேலிய விமானத்தில் இருந்த ஒருவருக்குக் கிருமித்தொற்று இருப்பது தெரிய வந்ததையடுத்து, அது மீண்டும் ஆஸ்திரேலியாவிற்கே திருப்பப் பட்டது.