ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் பாரு சட்டமன்றம் நேற்று கலைக்கப்பட்டது.
இதுதொடர்பாக நேற்று மாலை 5.00 மணியளவில் ஜோகூர் முதல்வர் ஹஸ்னி முகமது, மாநில மன்னர் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கந்தரை அவர்களைச் சந்தித்தார்.
அந்தச் சந்திப்பின்போது ஜோகூர் மாநில சட்டமன்றத்தைக் கலைப்பதற்கு சுல்தான் அனுமதி அளித்தார்.
இதையடுத்து, இன்னும் 60 நாள்களில் அம்மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தல் நடைபெறும்.
சென்ற மாதம் ஜோகூர் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் மாண்டுவிட்டார். இதையடுத்து, 56 இடங்களைக் கொண்ட சட்டமன்றத்தில் முதல்வர் ஹஸ்னிக்கு எதிர்க்கட்சியைவிட ஒரேயொரு உறுப்பினரின் (28 உறுப்பினர்கள்) ஆதரவு மட்டுமே கூடுதலாக உள்ளது.
நாடு முழுவதும் சராசரியாக தினசரி 3,000க்கும் அதிகமானவர்கள் தொற்றுக்கு ஆளாகும் நிலை இருந்தாலும், உறுதியற்ற பெரும்பான்மை, சுல்தான் இப்ராஹிமை சட்டமன்றக் கலைப்புக்கு ஒப்புக்கொள்ள வைத்ததாக அம்னோ அதிகாரிகள் தெரிவித்தனர்.
நவம்பர் 20ஆம் தேதி நடைபெற்ற மலாக்கா தேர்தலில், அம்னோ கட்சி பெற்ற அமோக வெற்றிக்குப் பிறகு, ஜோகூரிலும் இன்னோர் தேர்தலை எதிர்கொள்ள ஆர்வமாக உள்ளது.
இத்தேர்தல் மூலம் அம்னோ தலைமையிலான பாரிசான் நேசனல் கூட்டணிக்கு கிடைக்கும் மற்றொரு பெரிய வெற்றி என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வெற்றி, மத்தியில் ஆளும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பெர்சத்து கட்சியிடம் தனது பலத்தைக் காண்பித்து, அதன் தலைவர் முகைதீன் யாசினுக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தக்கூடும்.
அத்துடன் 2018ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் அம்னோ அடைந்த அதிர்ச்சித் தோல்விக்குப் பிறகு, கைநழுவிப் போன அதிகாரத்தை மீட்டெடுக்கும் நம்பிக்கையோடு பொதுத் தேர்தலை எதிர்கொள்ள ஊக்கமளிக்கும் என்றும் கூறப்படுகிறது.
அடுத்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் நடக்கவுள்ள பொதுத் தேர்தலுக்கு முந்தைய இத்தேர்தல் மாநிலக் கட்சிகளின் பலத்தைப் பிரதிபலிப்பதாகவும் இருக்கும்.