பியோங்யாங்: வடகொரியாவில் கொவிட்-19 தொற்றால் குறைந்தது ஒருவர் இறந்துவிட்டதாகவும் பல்லாயிரக்கணக்கானோரிடம் காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டுள்ளதாகவும் அரசாங்க ஊடகம் நேற்று தெரிவித்தது.
கொவிட்-19 பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து உலகெங்கும் பல நாடுகள் தொற்றை எதிர்த்துப் போராடி வந்த நிலையில், அந்தப் பாதிப்பிலிருந்து தப்பித்து வந்த வெகு சில நாடுகளில் வடகொரியாவும் ஒன்று. ஆனால், பல நாடுகளும் தொற்றுச் சூழலில் இருந்து மீண்டு வரும் வேளையில், வடகொரியா அதை எதிர்கொண்டு வருகிறது.
தென்கொரியாவின் புதிய அதிபரான யூன் சுக் யோல், வடகொரியர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசிகளையும் இதர மருத்துவ உதவிகளையும் வழங்கத் திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து வடகொரியாவுடன் தமது அரசாங்கம் கலந்தாலோசிக்கும் என்று அவருடைய பேச்சாளர் நேற்று கூறினார்.
வடகொரியாவில் கொவிட்-19 பரிசோதனை ஆற்றல் குறைவாக இருப்பதால், இதுவரை வெளியிடப்பட்டுள்ள தொற்று பாதிப்பு எண்ணிக்கை, உண்மையான பாதிப்பில் ஒரு சிறிய அளவாகவே இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
கொவிட்-19 தடுப்பூசித் திட்டம் இல்லாத உலகின் இரு நாடுகளில் ஒன்றான வடகொரியாவில் தொற்று காரணமாக ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கும் சாத்தியம் இருப்பதாகவும் நிபுணர்கள் சொல்கின்றனர்.