ஜகார்த்தா: அடுத்த வாரம் இந்தோனீசியாவில் நடைபெறவுள்ள ஜி20 சந்திப்பில் அந்நாடு பல ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றின் மூலம் பொருளியல் ரீதியாக தென்கிழக்காசியாவில் சக்திவாய்ந்த நாடாக வளரும் தனது இலக்கை வெளிப்படுத்துவது இந்தோனீசியாவின் இலக்கு.
உள்கட்டமைப்பு, கரிம வர்த்தகம் உள்ளிட்டவற்றின் தொடர்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன.
அடுத்த ஆண்டு 89 பில்லியன் டாலர் (125 பில்லியன் வெள்ளி) மதிப்புள்ள முதலீட்டுகளை ஈர்க்க இந்தோனீசிய அதிபர் ஜேக்கோ விடோடோ திட்டமிட்டுள்ளார். அத்தகைய இலக்குகளை அடைய வளர்ந்த பணக்கார நாடுகளின் ஆதரவும் நிதியுதவியும் அவசியம்.
இதற்கிடையே, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் மெய்நிகரில் ஜி20 சந்திப்பில் கலந்துகொள்ளக்கூடும். அடுத்த வாரம் திங்கட்கிழமையன்று பாலி தீவில் நடைபெறும் சந்திப்பில் நேரடியாகக் கலந்துகொள்ள முடியாவிட்டால் மெய்நிகரில் பங்கேற்க திரு புட்டின் கேட்டுக்கொள்ளக்கூடும் என்று திரு விடோடோ குறிப்பிட்டார்.