இர்ஷாத் முஹம்மது
உலகளாவியப் பொருளியல் மீட்சிக்கான உறுதியான முடிவுகளை ஜி20 வழங்கும் என்று எதிர்பார்ப்பதாக இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ கூறியுள்ளார்.
உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வருகை புரிந்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் நடத்திய இருதரப்பு சந்திப்பின் தொடக்கத்தில்
திரு விடோடோ அதனைத் தெரிவித்தார்.
"உலகின் பொருளியல் மீட்சிக்கு உதவும் உறுதியான பங்காளித்துவத்தை ஜி20 உச்சநிலை மாநாட்டு வழங்கும் என்று நம்புவோம்," என்றார் அவர். அமெரிக்காவுக்கும் இந்தோனீசியாவிற்கும் இடையிலான உத்திபூர்வ பங்காளித்துவத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி அதிபர் பைடன் பேசியதாகவும் அதை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து இரு தலைவர்கள் பேசியதாகவும் வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. வெற்றிகரமான உச்சநிலை சந்திப்புக்கும் ஜி20 தலைமைக்கும் திரு விடோடோவிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்த திரு பைடன், அடுத்த ஆண்டு ஆசியானின் தலைமைப் பொறுப்பை ஏற்பது குறித்தும் கருத்துரைத்தார். இந்தோ பசிஃபிக் வட்டாரத்தில் ஆசியானின் பங்கு, ஆசியானுக்கான அமெரிக்காவின் ஆதரவு போன்ற அம்சங்களும் அந்த சந்திப்பில் பேசப்பட்டன.
உலகின் ஆகப் பெரிய 20 பொருளியல்களைக் கொண்ட அமைப்பானது ஜி20. அர்ஜண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனீசியா, இத்தாலி, ஜப்பான், தென்கொரியா, மெக்சிகோ, ரஷ்யா, சவூதி அரேபியா, தென்னாப்
பிரிக்கா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் ஐரோப்பிய ஒன்றியமும் அந்த 20 உறுப்பி னர்களில் அடங்கும்.
சுழற்சி முறையில் இவ்வாண்டின் ஜி20 அமைப்பின் தலைமையை இந்தோனீசியா முதன்முறையாக ஏற்றுள்ளது. உயர்மட்ட அளவில் பல மாநாடுகள் நடந்து, இவ்வாரம் உலகத் தலைவர்கள் கலந்துகொள்ளும் உச்சநிலை மாநாடு பாலித்
தீவில் நடைபெறுகிறது.
உறுப்பினர் இல்லாத பட்சத்திலும் நட்பு நாடாக சிங்கப்பூர் அழைக்கப்பட்டுள்ளது. கம்போடியா, ஃபிஜி, நெதர்லாந்து, ருவாண்டா, ஆப்பிரிக்க ஒன்றியம், ஸ்பெயின், கரீபியன் சமூகம், உக்ரேன், ஐக்கிய அரபு சிற்றரசுகள் ஆகியவையும் அழைக்கப்பட்டுள்ளன.