காஸா போரில் சண்டை நிறுத்தம் தொடக்கம்

காஸா போரில் சண்டை நிறுத்தம் தொடக்கம்

2 mins read
d59e2a0a-f262-4fba-97ba-7cff4ebe3807
ஆகாயத் தாக்குதலில் சேதமடைந்த வீட்டைக் கடந்து செல்லும் சிறுவன். - படம்: இபிஏ

காஸா: காஸாவில் இஸ்‌ரேலும் ஹமாஸ் தரப்பும் இணக்கம் கண்டுள்ள நான்கு நாள் சண்டை நிறுத்தம் வெள்ளிக்கிழமை (நவ. 24) தொடங்கவிருக்கிறது.

உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு (சிங்கப்பூரில் பிற்பகல் 1 மணி) சண்டை நிறுத்தம் தொடங்கும்.

வெள்ளிக்கிழமை பின்னேரம் ஹமாஸ் தரப்பினர் தாங்கள் பிணைபிடித்த 13 இஸ்ரேலியப் பெண்களையும் குழந்தைகளையும் விடுவிப்பர்.

கடந்த அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் இஸ்‌ரேலில் நடத்திய தாக்குதலில் ஏறக்குறைய 200 பேரைப் பிணை பிடித்தனர்.

சண்டை நிறுத்தம் தொடங்க சில மணி நேரமே இருந்தபோதும் சண்டை இன்னும் தொடர்வதாகக் கூறப்படுகிறது.

காஸாவில் உள்ள மருத்துவமனை உள்ளிட்ட சில இடங்களில் இஸ்‌ரேல் குண்டு வீசியதாக பாலஸ்தீன அதிகாரிகள் கூறுகின்றனர்.

இரு தரப்புமே இந்த சண்டை நிறுத்தம் தற்காலிகமானது என்று கூறிவருகின்றன.

உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு (சிங்கப்பூரில் நள்ளிரவு) பிணை பிடிக்கப்பட்ட சிலர் விடுவிக்கப்படுவர் என்றும் நான்கு நாள்களில் மொத்தம் 50 பேர் விடுவிக்கப்படுவர் என்றும் கூறப்படுகிறது.

கத்தாரில் நடைபெற்ற அமைதிப் பேச்சில் இவ்வாறு இணக்கம் காணப்பட்டது. கத்தார் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் அதைத் தெரிவித்தார்.

சண்டை நிறுத்தம் தொடங்கியவுடன் கூடுதல் உதவிப் பொருள்கள் காஸா சென்றடையும். எகிப்து ஒவ்வொரு நாளும், 130,000 லிட்டர் டீசலையும் நான்கு லாரிகளில் எரிவாயுவையும் அனுப்ப உறுதிகூறியுள்ளது. இந்த நான்கு நாள்களிலும் அன்றாடம் 200 லாரிகளில் உதவிப் பொருள்கள் அனுப்பப்படும் என்று அது குறிப்பிட்டது.

உடன்பாட்டின்கீழ், இஸ்ரேலிய சிறைச்சாலைகளிலிருந்து பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுவதாக கத்தார் அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்தத் தற்காலிக சண்டை நிறுத்தம் நிரந்தர சண்டை நிறுத்தம் ஏற்பட வழிவகுக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்