இந்தோனீசிய சமூக ஊடகங்களில் ஒரு சிங்கப்பூர் குடும்பத்தின் சண்டை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
நான்கு குழந்தைகளை எடுத்துச் சென்றுவிட்டதாக பெண் குற்றம் சாட்டுகிறார். குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவதையும் தடுத்துவிட்டதாக அவர் கூறியுள்ளார். ஆனால் குழந்தைகளை நன்கு கவனித்துக் கொள்ளவில்லை என்று ஆண் சாடியிருக்கிறார்.
கடந்த வாரம் முழுவதும்சிங்கப்பூரரும் அவரது தென்கொரிய மனைவிக்கும் இடையிலான திருமணச் சண்டை தொடர்பான காணொளிகள் இந்தோனீசியா ஊடகங்களில் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இருவரும் ஜகார்த்தாவில் வசித்து வருகின்றனர்.
ஆயிரக்கணக்கான வலைப்பதிவாளர்கள் தங்களுடைய தரப்பு ஆதரவை இருவருக்கும் தெரிவித்துள்ளனர். காவல்துறையும் இவர்களது சண்டையை விசாரித்து வருகிறது.
ஜகார்த்தா காவல்துறை பேச்சாளரான மூத்த ஆணையர் அடெ அரி சியாம் இன்டிராடி, ‘பிஎம்ஜே’ என்று அடையாளம் கூறப்படும், ஆனால் இணையத்தில் ஏமி என்று அறியப்பட்டவர், ‘டபிள்யூஎம்ஜி’ என்று குறிப்பிடுபவர் மீதும் அவரது ‘டிஇ’ எனும் தனி உதவியாளர் மீதும் புகார் அளித்துள்ளார் என்று செய்தியாளர்களிடம் கூறினார்.
திருமதி ஏமி தனக்கும் தனது கணவருக்கும் இடையிலான வாக்குவாதம் தொடர்பான காணொளியை இன்ஸ்டகிராமில் வெளியிட்டதைத் தொடர்ந்து அவர்களுடைய 16 ஆண்டு கசப்பான வாழ்க்கை வெளிச்சத்துக்கு வந்தது.
மார்ச் 6ஆம் தேதி ஒரு மருத்துவனையில் நடந்த சம்பவமும் காணொளியாக வெளியானது.
மருத்துவமனையிலிருந்து வெளியேறும் கணவரையும் பதின்ம வயது மகளையும் சிசுவை கையில் வைத்திருந்த ‘டிஇ’ என்ற பெண்ணையும் ஏமி துரத்திச் செல்வது போன்று அதில் பதிவாகியிருந்தது.
ஜனவரி 21ஆம் தேதியில் இருந்து பெண் குழந்தையைப் பார்க்கவில்லை என்று இன்ஸ்டகிராம் பதிவில் கண்ணீருடன் ஏமி கூறியுள்ளார்.
“குழந்தையை கையில் வைத்துக் கொள்ள விரும்பினேன். அவர்கள் தடுத்துவிட்டனர். தாய்ப்பால் ஊட்டுவதற்காக அனுமதிக்கும்படி அவர்களிடம் கெஞ்சினேன். ஆனால் எல்லாவற்றுக்கும் முடியாது என்று கூறிவிட்டனர். எனக்கு என்னுடைய குழந்தைகள் வேண்டும்,” என்றார் அவர்.
2022 பிற்பகுதியில் சிங்கப்பூரர்களாகிய தனது குழந்தைகளுடனும் கணவருடனும் சிங்கப்பூரிலிருந்து ஜகார்த்தாவுக்கு ஏமி குடியேறியதாக அறியப்படுகிறது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தகவல் தெரிவிக்கிறது.
இந்த நிலையில் மார்ச் 10ஆம் தேதி வெளியிட்ட காணொளியில் அவரது கணவரும் மூத்த குழந்தையும் மலேசியாவில் உள்ள ஒரு ஹோட்டலிலிருந்து தங்களுடைய தரப்பு வாதத்தை முன்வைத்துள்ளனர்.
அவரது மகள், தனது தந்தையை ஏமி ஒரு வில்லனாக ஆக்கியிருப்பதாகத் தெரிவித்தார்.
தனது தாய்க்கு கோபப்படும் பிரச்சினை இருப்பதாகவும் இந்தோனீசியா செல்வதற்கு முன்பு சிங்கப்பூரில் தினமும் குடித்துவிட்டது தனது தாயார் வீட்டில் ரகளை செய்வார் என்றும் அவர் கூறியுள்ளார்.
‘டிஇ’ என்பவரை தனது தனி உதவியாளர் என்று கணவர் தன்னிடம் அறிமுகப்படுத்தியதாகவும் அவர்களுக்கு இடையே கள்ள உறவு இருந்தது பின்னர் தெரியவந்ததாகவும் ஏமி தெரிவித்தார்.
“சிங்கப்பூர் நீதிமன்றத்தில் மணவிலக்குப் பெற்று எனக்கு என் குழந்தைகள் கிடைத்தாக வேண்டும்,” என்று ஏமி கூறுகிறார்.
ஆனால் சிங்கப்பூரில் அதற்கான சட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டுவிட்டதா என்பது குறித்து தகவல் இல்லை.