பெய்ரூட்: லெபனானின் தெற்குப் பகுதியில் திங்கட்கிழமை (ஏப்ரல் 08) காலை இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் ஹிஸ்புல்லா குழுவின் தளபதி ஒருவர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் பல இடங்களுக்குப் பரவுவதாக எச்சரித்து ஐக்கிய நாட்டு நிறுவனம் (ஐநா), வன்செயல்களை நிறுத்தும்படி வலியுறுத்தியுள்ளது.
காஸாவில் இஸ்ரேலியப் படையினருக்கும் ஹமாஸ் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான போர் தொடரும் வேளையில், லெபனானின் தெற்குப் பகுதியில் இஸ்ரேலிய ராணுவத்துக்கும் ஹிஸ்புல்லா குழுவினருக்கும் இடையில் பூசல் இடம்பெறுகிறது. வட்டாரத்தில் போர் பரவுவது குறித்த அச்சத்தை இது அதிகரித்துள்ளது.
திங்கட்கிழமை காலை, அல்-சுல்தானியா எனும் கிராமத்தில் இஸ்ரேலியப் போர் விமானங்கள் தாக்கின. இதில் ஹிஸ்புல்லாவின் உயர் படைப் பிரிவான ‘ராட்வானின்’ தளபதி அலி அகமது ஹாசினும் மேலும் இருவரும் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேலிய ராணுவமும் லெபனான் பாதுகாப்புப் பிரிவும் இத்தகவலை வெளியிட்டுள்ளன.
இஸ்ரேலியர்கள் மீதான தாக்குதல்களுக்குத் திட்டமிடுதல், அவற்றை மேற்கொள்ளுதல் ஆகியவற்றுக்குத் தளபதி அலி அகமது ஹாசின் பொறுப்பு வகித்ததாக இஸ்ரேலிய ராணுவம் கூறியது.
ஹிஸ்புல்லா அமைப்பும் அவரது இறுதிச்சடங்கு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆனால் இயக்கத்தில் அவரது பொறுப்பு குறித்த மேல்விவரங்களை அது வெளியிடவில்லை.
கடந்த ஆறு மாதங்களில் இஸ்ரேலின் ஆகாயத் தாக்குதல்களில் ஹிஸ்புல்லா போராளிகள் ஏறக்குறைய 270 பேரும் பொதுமக்கள் 50 பேரும் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட பொதுமக்களில் குழந்தைகள், மருத்துவ ஊழியர்கள், செய்தியாளர்கள் போன்றோரும் அடங்குவர்.
ஹிஸ்புல்லா குழுவினரின் உந்துகணைத் தாக்குதலில் இஸ்ரேலியப் படையினர் 10க்கு மேற்பட்டோரும் பொதுமக்கள் சிலரும் கொல்லப்பட்டனர்.
இரு தரப்பிலும் பல்லாயிரம் பேர் வசிப்பிடங்களை விட்டு வெளியேறினர். லெபனானில் குண்டுவீச்சால் பாதிக்கப்பட்ட விளைநிலங்கள் பயிரிடப்படாமலோ அறுவடை செய்யப்படாமலோ பாழாகிக் கிடக்கின்றன.
லெபனானுக்கான ஐநாவின் சிறப்பு ஒருங்கிணைப்பாளரும் லெபனானில் உள்ள ஐநாவின் அமைதிப்படைத் தளபதியும் வன்செயல்கள் முடிவுக்கு வரவேண்டும் எனத் தங்கள் கூட்டறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர்.
தாக்குதல், பதிலடி எனத் தொடரும் வன்செயல்கள், 2006ஆம் ஆண்டு நடப்புக்கு வந்த, ஐநா பாதுகாப்பு மன்றத்தின் தீர்மானம் 1701ஐ மீறும் வகையில் அமைந்துள்ளன என்று அவர்கள் கூறினர்.