ஆஸ்திரேலியா: அதிவேகமாகப் பரவும் தன்மை கொண்ட கொவிட்-19 'டெல்டா' ரக கிருமி சிட்னியில் நான்காவது நபரை பாதித்துள்ளதை தொடர்ந்து பொது போக்குவரத்தில் பயணம் செய்யும்போது முகக் கவசம் அணிவது சிட்னியில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நல்ல கொவிட்-19 கிருமித்தொற்று பாதுகாப்பு நடைமுறைகள் நடப்பில் இருந்தால் அனைத்து வெளிப்புற நிகழ்ச்சிகள் திட்டமிட்டப்படி நடக்கலாம் என்று அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரு மாதத்திற்கு மேலாக அங்கு எந்த கொவிட்-19 பாதிப்பும் இல்லாத நிலையில், புதிதாக அங்கு உருவாக்கம் கண்டுள்ள தொற்று குழுமம் அவ்வப்போது வெளிநாட்டு விமான ஊழியர்களை இடங்களுக்கு கொண்டுச் செல்லும் வாகன ஓட்டுநருடன் தொடங்கியது என்று அறியப்படுகிறது.
அந்த நான்காவது நபர் சிட்னி கடைத்தொகுதி ஒன்றில் ஏற்கெனவெ கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவரின் தொடர்பில் இருந்ததால் அவருக்கும் அந்த கிருமி பரவியது என்று நம்புவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
"மக்கள் இதனால் பதற்றம் அடைய வேண்டாம் ஆனால் அதே சமயம் அனைவரும் விழிப்புடன் செயல்படும்படி கேட்டுக்கொள்கிறோம்," என்று தெரிவித்தார் நியூ சவுத் வேல்ஸ் மாநில முதல்வர் கிளாடி பெரிஜாக்கிளியான்.
ரயில், பேருந்து, பயணப்படகுகளில் (சிட்னி நேரப்படி) மாலை நான்கு மணி முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு பொது மக்கள் முகக் கவசம் அணிந்து பயணம் செய்ய வேண்டும்.
பேரங்காடி போன்ற உள்புற இடங்களிலும் சிட்னியில் வாழும் 5 மில்லியன் குடியிருப்பாளர்கள் முகக் கவசம் அணியும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.