ஒவ்வோர் ஆண்டும் வெவ்வேறு கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு பார்வையாளர்களைச் சிந்திக்க வைக்க வலம் வரும் ஒரு நிகழ்ச்சி ‘சங்கே முழங்கு’.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இந்திய மாணவர்கள் தங்களின் கலை ஆர்வத்தையும் திறனையும் வெளிப்படுத்த ஒரு முக்கிய தளமாக இந்நிகழ்வு இருந்து வருகிறது.
“இந்த ஆண்டும் சிங்கப்பூரின் முக்கிய மைல்கல் ஒன்றே கதைக் கருவுக்குப் பயன்படுத்தப்படுகிறது. சர் ஸ்டாம்ஃபர்ட் ராஃபிள்ஸ் சிங்கப்பூரில் தரையிறங்கி 200 ஆண்டுகளாகியுள்ளதைச் சிறப்பிக்கும் ஒரு முயற்சியில் என்யுஎஸ் மாணவர்கள் இறங்கியுள்ளனர்,” என்று நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அரவிந்தன் தயாளன் குறிப்பிட்டார்.
சென்ற ஆண்டு, ‘செயற்கை நுண்ணறிவு’ என்ற கருப்பொருளை ஒட்டி எதிர்காலச் சிந்தனையைத் தூண்டியது சங்கே முழங்கு.
தொடர்ந்து இவ்வாண்டு தனது பார்வையாளர்களை 1970களுக்கே இந்நிகழ்ச்சி கொண்டுசெல்ல உள்ளது. இதற்கான ஏற்பாடுகளும் பயிற்சிகளும் கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன்னரே தொடங்கப்பட்டுவிட்டன. இதில் 150க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் முழு மூச்சுடன் ஈடுபட்டு வருகின்றனர்.
நடனம், நாடகம் மட்டுமன்றி மேடை அலங்காரத்திலிருந்து ஆடை, ஒப்பனை என்ற அனைத்து அம்சங்களிலும் மாணவர்கள் தங்களின் கைவண்ணத்தைக் காட்டியுள்ளனர்.
நாடகம் தமிழ்மொழியில் அரங்கேறினாலும் அனைத்து இனத்தவரையும் கவர்ந்து நிகழ்ச்சியை ரசிக்க வைக்கும் வகையில் ஆங்கில மொழிபெயர்ப்பும் சேர்த்து வழங்கப்படும்.
நிகழ்ச்சிக்குச் சிறப்பு சேர்க்கும் வகையில் 'ஏகேடி கிரியேஷன்ஸ்', ஸ்ரீ வானர வீர உருமி மேளக் குழு ஆகியவை கிராமிய கலைகளை என்யுஎஸ் மாணவர்களுடன் சேர்ந்து நாடகத்தில் படைக்க உள்ளன.
'சங்கே முழங்கு' நிகழ்ச்சி அடுத்த மாதம் 2, 3 ஆகிய தேதிகளில் என்யுஎஸ் பல்கலைக்கழக கலாசார மைய அரங்கில் நடைபெற உள்ளது.
நுழைவுச்சீட்டுகளுக்கு 81066955 என்ற எண்ணுடன் தொடர்புகொள்ளலாம் அல்லது bit.ly/sangae19ticket என்ற இணையத்தளத்துக்குச் செல்லலாம். ஐந்து டிக்கெட்டுகளை வாங்கினால் $10 தள்ளுபடி பெறலாம்.