உணர்வுகளை யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாமல் சிக்கித் தவித்த மலாய்-சீக்கியரான ஷசுவான் ஷிராஜ், 20, இன்று ‘ராப்’ இசைக் கலைஞராக அனைவரையும் அசத்தி வருகிறார்.
தனது பதின்ம வயதில் சக மாணவர்களால் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளானவர் ஷசுவான். அத்துடன் தன் பெற்றோரின் பிரிவும் சேர்ந்து அவரைத் துயரில் ஆழ்த்தியது. எந்தக் கல்விப் பாதையை மேற்கொள்வது என்று திக்குதிசையற்று இருந்த ஷசுவான், தொழில்நுட்பக் கல்விக்கழகத்தில் சேர்ந்தார். தனக்கு ஏற்பட்ட சவால்களையும் துன்பங்களையும் எதிர்கொள்ள இசையை நாடினார்.
தனது இன்னல்களையும் தினசரி அனுபவங்களையும் ‘ராப்’ பாடல்களின் வழி சென்ற ஆண்டு வெளிப்படுத்தத் தொடங்கினார் இந்த இளைஞர். தான் எழுதிய ‘ராப்’ பாடல் வரிகளைத் தனது குழுவினருடன் இசையமைத்துச் சமூக வலைத் தளங்களில் காணொளிகளின் வழி மக்களைச் சென்றடைந்தார் இவர்.
ஒரே ஆண்டில் இவர் பெயர் பிரபலமடைந்தது. தற்போது நன்யாங் பலதுறைத் தொழில்நுட்பக் கல்லூரியில் சமூக சேவைத் துறையில் இரண்டாம் ஆண்டு மாணவராகப் பயிலும் ஷசுவான், இன்று சிங்கப்பூரின் வளர்ந்துவரும் இசைத் திறனாளர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.
இவரின் திறமைக்கு அங்கீகாரம் கொடுக்கவல்லதாக ‘த கிரேட் சிங்கப்பூர் ரீப்ளே சீசன் 2’ இசை நிகழ்ச்சி அமையவுள்ளது.
உள்ளூரிலேயே பாடல்கள் உருவாக்கப்படுவதை ஊக்குவிக்க ஈராண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் நிகழ்ச்சி இது.
இந்நிகழ்ச்சியில் நாட்டின் இசைத் துறையில் கால்பதித்து வரும் பிரபல இசைக் கலைஞர்களும் வளர்ந்துவரும் திறனாளர்களும் இணைந்து செயல்படுவர்.
சிங்கப்பூர் வரலாற்றின் ஐந்து முக்கிய காலகட்டங்களில் வெளி வந்த வெவ்வேறு இசை வகை களின் கலவையையும் ஐந்து நவீன இசை வகைகளையும் தழுவி பத்து பாடல்கள் இந்நிகழ்ச்சியில் படைக்கப்படும்.
நாட்டின் இருநூற்றாண்டு நிறைவை முன்னிட்டு சிங்கப்பூரின் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் நவீன இசையின் வழி வெளிப் படுத்துவதற்காக இந்நிகழ்ச்சி அடுத்த ஆண்டு ‘த கார்டன்ஸ் பாய் த பே’யில் நடைபெறவுள்ளது.
இதில் பங்கேற்பதற்கு மொத்தம் 231 விண்ணப்பங்கள் கிடைத்தன.
‘புவாட் ஆப்ப’ எனும் தலைப்பில் ‘ராப்’ பாடலைப் பாடிய ஷசுவான் இந்நிகழ்ச்சியின் சிறந்த பாடகர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அதையடுத்து, வரும் ஜனவரி மாதம் 18ஆம் தேதியன்று இடம்பெறவுள்ள இந்நிகழ்ச்சிக்காக ஷசுவான் புதுப் பாடல் ஒன்றைத் தயாரித்து வருகிறார்.
இதற்காக உள்ளூரிலும் இந்தியாவின் தமிழ் சினிமா இசை உலகிலும் கலக்கி வரும் பிரபல இசை யமைப்பாளரான ஷபீர், ஷசுவானின் ஆலோசகராக உள்ளார்.
இந்நிகழ்ச்சிக்காக ‘இலக்ட்ரானிக்’ இசையுடன் ‘ராப்’ பாடல் ஒன்றைப் படைக்கவுள்ள ஷசுவான், ஷபீரின் வழிகாட்டுதலுடன் அதைத் தயாரித்துக்கொண்டிருக்கும் பயணத்தைப் பற்றி பகிர்ந்துகொண்டார்.
“கிட்டத்தட்ட 10 வாரங்களுக்கு அவருடன் இணைந்து இப்பாடலைத் தயாரிப்பதில் ஈடுபட்டு வருகிறேன். இசை, பாடல் வரிகள் என இப்பாடலின் பல்வேறு அம்சங்கள் குறித்து அவர் எனக்கு ஆலோசனை அளித்து வருகிறார்.
“அனுபவமிக்க உள்ளூர் இசைப் பிரபலமான ஷபீருடன் நான் இசை தொடர்பான நிகழ்ச்சியில் சேர்ந்து ஈடுபடுவது ஓர் அரிய வாய்ப்பு. நான் தொடர்ந்து இசை உலகில் முன்னேற்றம் காண இச்சந்திப்பு ஒரு முக்கிய ஊக்குவிப்பாக அமையும்,” என்றார் அவர்.
இந்நிகழ்ச்சியில் முதன்முறையாக ஆலோசனை வழிகாட்டியாக பங்கேற்றுள்ள 34 வயது ஷபீர், வளர்ந்துவரும் உள்ளூர் திறனாளர்களுடன் தமது அனுபவங்களையும் இசை அறிவையும் பகிர்ந்துகொள்வதால் தம்மையும் மேம்படுத்திக்கொள்ள முடிகிறது என்றார்.
“சிங்கப்பூரின் இசை வரலாற்றை ஆராய்வதுடன் இசையின் மூலம் கலைஞர்கள் தங்களை வெளிப் படுத்துவதற்கு இந்நிகழ்ச்சி ஒரு சிறந்த தளமாக அமைந்துள்ளது.
“வெவ்வேறு வகையான இசையை உருவாக்கும் கலைஞர்
களுக்கு இது ஓர் ஆரம்பத் தளம். இசைத் துறையில் மேம்பட இது அவர்களை ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன்,” என்றார் ஷபீர்.