வங்கியில் சில ஆண்டுகளாக வேலை செய்துகொண்டிருந்த ஷஹீர் ராஜீருக்கு எப்போதுமே மோட்டார்சைக்கிள்கள் மீது மோகம் அதிகம்.
அவற்றின் மீதான பேரார்வம், இவர் சொந்த தொழிலைத் தொடங்க வித்திட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் காக்கி புக்கிட் பகுதியில் மோட்டார்சைக்கிள்களைப் பழுதுபார்க்கும் ‘பைக்பாய்ஸ் எஸ்ஜி’ என்ற நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார் இந்த ஆங்கில இலக்கியத் துறை பட்டதாரி.
சொந்த தொழிலைத் தொடங்கியபோது கொவிட்-19 கிருமித்தொற்று காரணத்தினால் வெளிநாடுகளிலிருந்து மோட்டார்சைக்கிள் பாகங்களை சிங்கப்பூருக்கு இறக்குமதி செய்வதில் தாமதம் ஏற்படுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை இவர் சமாளிக்க வேண்டியிருந்தது.
அத்துடன், புதிய வாடிக்கையாளர்களைத் தேடுவதும் பெரும் சவாலாக விளங்கியது. வாடிக்கையாளர்களைச் சென்றடைய, ‘கெரோபிஸ் பூஸ்தர்’ எனும் திட்டம் ஒன்றைப் பற்றி ராஜீருக்குத் தெரிந்த ஒருவர் எடுத்துரைத்தார். அவரது ஊக்குவிப்பால் ராஜீர் அதில் சேர்ந்தார்.
இத்திட்டம் அக்கம்பக்க சில்லறை வர்த்தகர்களும் சேவை வழங்கும் நிறுவனங்களும் இணையம்வழி தங்களது தொழில்களை வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சேர்க்க வகைசெய்கிறது.
இத்திட்டத்தின் உருவாக்கத்திற்கு அரசாங்க ஊழியர் ஒருவரின் பங்கும் எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பின் ஆதரவும் அடங்கி உள்ளது.
ராஜீரின் பழுதுபார்ப்புப் பட்டறைக்கு வாடிக்கையாளர்கள் நேரடியாக வருவதற்குப் பதிலாக ‘கெரோசெல்’ பொருள் விற்பனைத் தளத்தில் பழுதுபார்ப்புப் பணிகளுக்காக இவர் விதிக்கும் கட்டணங்களையும் மோட்டார்சைக்கிள் பாகங்களின் விலையையும் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
ராஜீரின் பழுதுபார்ப்பு சேவையைப் பெற விரும்புவோர், கெரோசெல் தளம் வழியாக நேரத்தை முன்பதிவு செய்ய முடியும்.
“புதிய வாடிக்கையாளர்களைச் சென்றடையவும் எனது ஒட்டுமொத்த பொருட்களையும் சேவைகளையும் பற்றி அறிய பலரும் பட்டறைக்கு வந்தனர். வாடிக்கையாளர்கள் இங்கு வராமலேயே அவர்களின் பல கேள்விகளுக்கு விடையளிக்கவும் முடிந்தது. ‘கெரோபிஸ் பூஸ்தர்’ திட்டத்தில் சேர்ந்ததில் வருமானம் ஏறக்குறைய 30 விழுக்காடு கூடியது,” என்று கூறினார் ராஜீர், 32.
இத்திட்டத்தில் சேர நிறுவனங்களுக்கு எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு தாராளமாக நிதி ஆதரவு வழங்குகிறது.
சிறிய தொழில்களை மின்னிலக்கமயமாக்கி அவற்றுக்கு ஆதரவு வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
“மின்னிலக்க உலகில் திறன்பேசி வழி அனைவரும் பொருள், சேவை விலை ஒவ்வொன்றையும் ஒப்பிடுவது இயல்பாகிவிட்டது. மின்னிலக்க முறையில் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வது வாடிக்கையாளர்களுக்கும் நிறுவனங்களுக்கும் நேரத்தை மிச்சப்படுத்துகிறது,” என்று ராஜீர் கூறினார்.
எதிர்காலத்தில் மோட்டார்சைக்கிள்களில் கோளாறுகளைக் கண்டறிய உதவும் தொழில்நுட்பச் சாதனங்களில் முதலீடு செய்ய விரும்பும் ராஜீர், அதன் வழி பழுதுபார்க்கும் நேரத்தைக் குறைப்பது தமது நோக்கம் என்று விளக்கினார்.