துரைமாணிக்கம் நிஷாந்த், சாய் பாலாஜி லட்சுமணன்
(முதலாமாண்டு இலக்கிய மாணவர்கள், யீசூன் இன்னோவா தொடக்கக் கல்லூரி)
சனிக்கிழமை, (15/05/2021) அன்று மெய்நிகர் தளமான Zoomல், “இலக்கியமும் வாழ்வியலும்” எனும் கருப்பொருளில் இவ்வாண்டின் பல்கலைக்கழக புகுமுக வகுப்புகளுக்கான தமிழ்மொழி /இலக்கியக் கருத்தரங்கை யீசூன் இன்னோவா தொடக்கக் கல்லூரி மிகச் சிறப்பாக நடத்தியது.
சிறப்பு விருந்தினராக, கல்வியமைச்சின், தலைமை முதன்மை ஆசிரியர், மரியாதைக்குரிய முனைவர் திரு. ஜெயராஜதாஸ் பாண்டியன் அவர்கள், முதன்மை பேச்சாளராக செயிண்ட் ஆன்ட்ரூஸ் தொடக்கக் கல்லூரியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றும் மதிப்பிற்குரிய முனைவர் திரு. கணபதி ராஜகோபாலன் அவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எனறு சுமார் 170 பேர் கலந்துகொண்டு பெருமை சேர்த்தனர்.
எங்கள் கல்லூரி மாணவிகளின் தமிழ் வாழ்த்துப் பாடலோடு, கல்லூரியின் முதல்வர் திரு. மைக்கேல் டீ சில்வா அவர்கள் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியைச் சிறப்புறத் தொடங்கி வைத்தார். பிறகு சிறப்பு விருந்தினர் தம் உரையில் தமிழின் பெருமை, இலக்கியத்தின் சாராம்சம் மற்றும் அதன் சில பரிமாணங்களையும் பகிர்ந்துகொண்டார். மேலும் பல பயனுள்ள பொன்னான கருத்துக்களையும் விரிவாக எடுத்துரைத்தார்.
அடுத்து இந்நிகழ்வில் யீசூன் இன்னோவா, யுனோயா மற்றும் தேசியத் தொடக்கக் கல்லூரி, கல்விக் கழக மாணவர்கள், முறையே கணியன் பூங்குன்றனார் எழுதிய சங்க காலக் கவிதையான ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற கவிதையையும், சே வே சண்முகம் அவர்களின் படைப்பான ‘சிங்கப்பூர் மாப்பிள்ளை’ என்ற நாடகத்தையும், கு. பா. ராஜகோபாலன் அவர்கள் எழுதிய ‘விடியுமா?’ என்ற சிறுகதையையும், அக இலக்கியங்களான நற்றிணை, குறுந்தொகை பாடல்களையும் படைத்தார்கள். மெய்நிகர் வாயிலாக இருந்தாலும் படைப்புகள் யாவும் எங்கள் மனங்களில் நன்கு பதியும் வண்ணம் இருந்தன. இவை நமது பாடத்திட்டதில் உள்ள இலக்கியங்களாக இருந்ததால் அவற்றை மேலும் ஆழமாகப் புரிந்துகொள்ள இப்படைப்புகள் உதவின. படைத்த மாணவர்கள் தெளிவாகவும், புதுமையாகவும்f சொல்லப்பட்ட கருத்துகளை நடைமுறை வாழ்க்கையோடு தொடர்பு படுத்தியும் பேசியது பாராட்டத்தக்கது.
இடைவேளையின்போது, நாங்கள், மறைந்த நடிகர் விவேக் அவர்களின் நினைவாக ஒரு வேப்பமரத்தையும் மாமரத்தையும் எங்கள் கல்லூரியில் நட்டதைப் பற்றிய காணொளியைப் படைத்தோம். 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற எங்கள் கல்லூரி கருத்தரங்கில் சிறப்புப் பேச்சாளராக அவர் கலந்துகொண்டார். இயற்கைப் பாதுகாப்பு ஆர்வலரான அவர், அவ்வாண்டு எங்கள் கல்லூரியில் மரம் நடவேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் அவ்வெண்ணம் நிறைவேறவில்லை. எனவே, அவரது நினைவாக இவ்வாண்டு நாங்கள் இரண்டு மரங்களை நட்டு, அவரது ஆன்மா அமைதி காண வேண்டி நின்றோம். அந்தக் காணொளி எங்கள் மனங்களையும் பணிக்கச் செய்தது.
இறுதியாகக் சிறப்புரையாற்றிய சிறப்பு பேச்சாளர் முனைவர் இராஜகோபாலன் அவர்கள், நமது மனங்களைக் கவரும் வண்ணம் நாடகம், பாடல், சிறுகதை, கவிதை போன்ற இலக்கிய வடிவங்களின் எடுத்துக்காட்டுகளை மிக எளிமையான மொழிநடையிலும் நயமான பாங்கிலும் எடுத்துரைத்தார். இதனையடுத்து கேள்வி பதில் அங்கமும் நடந்தேறியது. கேட்கப்பட்ட கேளிவிகளுக்கு சிறப்பு விருந்தினரும், சிறப்புப் பேச்சாளரும், எங்கள் ஆசிரியர்களும் பதிலளித்தனர்.
ஆகவே, இலக்கியங்களின் நுட்பங்கள், அவை எவ்வகையில் மனிதனின் இக்கால வாழ்விற்கும் வழிவகுக்கின்றன என்பதையும், உயரிய வாழ்வியல் சிந்தனைகளைப் பற்றியும் இவ்விளக்கமான கருத்தரங்கிலிருந்து நாங்கள் புரிந்துகொண்டோம். இலக்கியங்கள் என்பவை வெறும் சொற்களின் நேர்த்தியைப் பற்றியது மட்டுமல்ல; அவை வாழ்க்கையில் மனிதன் அடைய வேண்டிய வளர்ச்சியை, சிறப்பைப் பற்றியது என்பதையும் அறிந்து தெளிந்தோம்.
இலக்கியங்களைப் படித்துப், புரிந்து, உணர்ந்து, தெளிவு பெறுவதுடன் அவற்றை வாழ்வில் பின்பற்றவும் வேண்டும். இலங்கியப் பாடத்தை மாணவர்கள் ஒரு கற்பனை நிறைந்த பாடமாக மட்டும் கருதாமல், அவைக் கற்றுத் தரும் அறநெறிகளையும் பண்பு நலன்களையும் அவர்களது அன்றாட வாழ்வில் ஒன்றிணைத்து, நிஜத்தில் பின்பற்றினால்தான், அவர்களால் உண்மையான உயர்வை அடைய முடியும். ஆதலால், இந்தக் கருத்தரங்கின் கருப்பொருளான “இலக்கியமும் வாழ்வியலும்" மிக பொருத்தமானது என்பதை நாங்கள் ஏற்றுப் பாராட்டுகிறோம்.
எங்களுக்கு இலக்கியத்தின் மகத்துவத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிய இக்கருத்தரங்கை நடத்திய எங்கள் கல்லூரி ஆசிரியப் பெருமக்களுக்கும், கலந்துக்கொண்ட அனைவருக்கும் எங்களது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.