தந்தையின் இழப்பிற்குப் பின் மிகுந்த மனவேதனைக்கு ஆளானார் ராமசாமி உஷாதேவி செலின். அந்தத் துயரத்தைப் போக்க தொண்டூழியம் புரிய முடிவெடுத்தார். ‘ஹெஜ்சிஏ அந்திமக்கால பராமரிப்பு நிலையத்தில்’ 2017ஆம் ஆண்டிலிருந்து அவரது தொண்டூழியப் பயணம் தொடங்கியது. ஒருநாள், பராமரிப்பு நிலையத்தில் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டதால், தன்னுடைய சகோதரரின் மகளான பிரியங்காவை உதவிக்கு அழைத்தார்.
“நான் மிகவும் அமைதியானவள். இந்த தொண்டூழியப் பணியை தொடங்கியபோது எனக்குத் தயக்கமாக இருந்தது. ஆனால், அங்குள்ள முதியோர் என்னுடன் அன்பாக உரையாடினர். அந்த அன்பு என்னை அவர்களுடன் பிணைத்துவிட்டது. இப்போது நாங்கள் ஒரு குடும்பமாகிவிட்டோம்,” என்றார் யமாகா இசைப் பள்ளியில் பயிலும் ஜெகதீசன் பிரியங்கா செசனா.
ஒருமுறை, அதிக எண்ணிக்கையில் வந்திருந்த முட்டைகளை என்ன செய்வது என்று திண்டாடியபோது, பிரியங்காவின் யோசனைப்படி இருவரும் ஃபிரிட்டாடா என்ற இத்தாலிய உணவு வகையைச் சமைத்தனராம். வாழ்க்கையில் முதல் முறையாக அந்த உணவு வகையை உண்ட பராமரிப்பு நிலையத்தின் முதியோரிடையே அந்த உணவு பெரும் வரவேற்பைப் பெற்றதாக செலின் பகிர்ந்துகொண்டார்.
“சேர்ந்து சமூகப்பணி செய்தது வழி பிரியங்காவுடன் நான் நெருக்கமானேன். தொண்டூழியத்தின்மேல் எனக்கு ஏற்பட்ட ஆர்வம், அவளையும் தொற்றிக்கொண்டது. அதேபோல, அவளுக்கு இசையின் மேல் உள்ள காதல் என்னை மறுபடியும் பியானோ கற்றுக்கொள்ள வைத்துவிட்டது,” என்று கூறினார் பணி ஓய்வு பெற்றுள்ள 61 வயதான செலின்.
இந்த அன்பர் தினத்தில் உதவி தேவைப்படுவோருக்குச் சேவை செய்வதற்கான வாய்ப்புகளைக் கண்டறிய giving.sg தளத்தை மக்கள் நாடலாம்.