கேலிச்சித்திரம், வீடியோ விளையாட்டு, தொலைக்காட்சி நிகழ்ச்சி போன்றவற்றில் தோன்றும் கற்பனைக் கதாபாத்திரம்போல் தன் தோற்றத்தை மாற்றிக்கொள்பவரை ‘காஸ்ப்ளே’ (cosplay) கலைஞர் என்போம். அந்தக் கதாபாரத்திரத்தைப்போலவே தங்களின் ஆடை, சிகை அலங்காரம், ஆபரணங்களை மிகத் துல்லியமாகப் அமைத்துக்கொள்வார்கள்.
முழுநேர மக்கள்தொடர்பு அதிகாரியான 27 வயது ஃபஸ்ரினா நசீர், கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக ‘காஸ்ப்ளே’ கலைஞராக இருக்கிறார்.
“என் நெருங்கிய தோழி முதல்முறையாக எனக்கு ஜப்பானிய உயிரோவியங்களை (animation) அறிமுகப்படுத்தினார். பின்னர், அதில் எனக்கு அதீத ஈடுபாடு ஏற்பட்டது. ஜப்பானிய அனிமேஷன் கதாபாத்திரம் ஒன்றின் உடையைப் பார்த்துவிட்டு 12 வயதில் எனது முதல் காஸ்ப்ளே ஆடையை வாங்கி அதை நான் அணிந்து வெளியெ சென்றேன்,” என்று பகிர்ந்துகொண்டார் ஃபஸ்ரினா.
காஸ்ப்ளே சமூகத்தினரிடையே ‘செவன்’ (seven) என்று அறியப்படும் ஃபஸ்ரினா, 17 வயதுமுதல் முக ஒப்பனை செய்வதிலும் நாட்டம் கொண்டார்.
காஸ்ப்ளே கலைக்கு முக ஒப்பனை துணைபோவதால் தனக்குப் பிடித்தமான இரு நடவடிக்கைகளையும் ஒரே நேரத்தில் செய்யும் வாய்ப்பு தனக்குக் கிடைத்துள்ளது என்கிறார்.
“எனக்குப் பிடித்த ஒரு கற்பனைக் கதாபாத்திரத்தின் கண்ணோட்டத்தில், சிந்திக்கும் சுதந்திரத்தை காஸ்ப்ளே எனக்குத் தருகிறது. சிகை அலங்காரம், முக ஒப்பனை, ஆடைகள் போன்றவை மூலம், வேறொரு கதாபாத்திரமாக மாறி, அதற்கு உயிர் கொடுக்கும் வாய்ப்பு கிடைக்கிறது,” என்றார் ஃபஸ்ரினா.
1984ஆம் ஆண்டில் ‘கொசுபுரே’ என்ற ஜப்பானிய சொல்லிலிருந்து பிறந்த ‘காஸ்ப்ளே’, சிங்கப்பூருக்கு ஒன்றும் புதிதல்ல. சிங்கப்பூர் ஆண்டுதோறும் நடத்திவரும் ‘ஆசிய அனிமே ஃபெஸ்டிவல்’ மாநாடு, காஸ்ப்ளே தொழில்துறையினர், ரசிகர்கள், ஆர்வலர்கள் ஆகியோரை ஒருங்கிணைக்கும் ஒரு தளமாக உள்ளது. 2008 முதல் சன்டெக் சிங்கப்பூர் கண்காட்சி மாநாட்டு, மையத்தில் நடத்தப்பட்டு வரும் இந்த விழா, இன்றுவரை சுமார் 1.7 மில்லியன் பங்கேற்பாளர்களை ஈர்த்துள்ளது.
சிங்கப்பூர் பயணத்துறைக் கழகத்தின் ‘சிறந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சி’க்கான விருதையும் 2019ல் இந்த மாநாடு வென்றது.
“மாநாடுகளின்போது என்னோடு புகைப்படங்கள் எடுத்துக்கொள்ள பலரும் கேட்பதுண்டு. அவர்களின் முகங்களில் காணப்படும் பிரம்மிப்பு எனக்கு மகிழ்ச்சி அளிக்கும்,” என்றார் ஃபஸ்ரினா.
“ஒரு முழுநேர வேலையில் இருந்துகொண்டே காஸ்ப்ளே மீதும் கவனம் செலுத்துவதால் நான் சோர்ந்துபோவதுண்டு. ஆனால், இந்த ஆர்வத்தை வளர்க்க எனக்கு இப்போது வருமானமும் கிடைப்பதால் என்னை நானே உற்சாகப்படுத்திக்கொள்வேன்,” என்றார் ஃபஸ்ரினா.
இவர் அடுத்து என்ன ஒப்பனை செய்யப்போகிறார், எந்த கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுக்கப்போகிறார் என நண்பர்களும் குடும்பத்தாரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும் தனது படைப்பாக்கத்தை அவர்களிடம் காட்டுவதில் தான் பெருமகிழ்ச்சி அடைவதாகவும் குறிப்பிட்டார் ஃபஸ்ரினா.
செய்தி: காயத்திரி காந்தி