தன் தந்தையைப்போல் தானும் ஒரு விமானி ஆக வேண்டும் என்று சிறுவயதிலிருந்தே லாவேஷ் ஷேன், 18, லட்சியம் கொண்டிருந்தார். இதற்காக உயர்நிலைப்பள்ளியில் பயின்ற காலத்திலேயே விமானத் துறை சார்ந்த ‘ஏரோமாடலிங்’ இணைப்பாட நடவடிக்கையில் ஈடுபட்டார். தன் சிறுவயது இலக்கை அடைய சிங்கப்பூர் இளம் விமானிகள் சங்கத்தில் இணைந்தார்.
அவரின் கடின உழைப்புக்குக் கடந்த 10ஆம் தேதியன்று நடைபெற்ற விருது விழாவில் அங்கீகாரம் கிடைத்தது. விமானம் ஓட்டும் பயிற்சியில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற 24 தொடக்கக் கல்லூரி மற்றும் பலதுறைத் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுக்கு ‘பைலட் விங்’ பதக்கச் சின்னமும் (badge) சான்றிதழும் வழங்கப்பட்டன. ‘எஸ்டி இன்ஜினியரிங் எக்சலன்ஸ்’ விருதுகளில் ‘விமானம் ஓட்டுவதில் தலைசிறந்தவர்’ பிரிவில், இரண்டாம் நிலையில் வந்திருந்தார் ஷேன்.
விழாவில் தற்காப்பு, மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
தற்போது தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் இரண்டாமாண்டு மருத்துவ உயிர்தொழில்நுட்பத் துறையில் பயின்று வருகிறார் ஷேன்.
படிப்பு ஒரு துறையிலும் விருப்பம் இன்னொரு துறையிலும் இருப்பதால் நேரத்தைச் சரிவரத் திட்டமிடுவது அவருக்குச் சவாலாக அமைந்தது எனக் கூறினார். கால அட்டவணை உதவியதாக அவர் கூறினார்.
சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படையில் தன் கனவை ஒருநாள் நனவாக்கிட, இந்த விருது ஊக்கம் தருவதாக அமைந்துள்ளது என்றார். வானில் பறக்கும் ஒவ்வொரு நாளும் சுமுகமாக அமைவதில்லை. அவ்வாறு ஷேன் துவண்டு போகும் நேரங்களில் தன் குடும்பத்தினர் பெரும் ஆதரவாக இருப்பதாகக் கூறினார்.
குறிப்பாக தன் தந்தை கூறிய ஆலோசனை ஒன்றைப் பகிர்ந்துகொண்டார் அவர்.
“உன் சூழலுக்கு ஏற்ப உன்னை மாற்றிக்கொண்டு தன்னம்பிக்கையுடன் எதிர்நீச்சல் போட்டால் எதையும் எதிர்கொள்ளலாம்,” என்று அவர் தந்தை கூறுவாராம்.
கட்டொழுங்கான வாழ்க்கைமுறையைப் பின்பற்றி வரும் ஷேன், விமானங்கள் புறப்படுவதும் தரை இறங்குவதும் பார்ப்பதையே தனது பொழுதுபோக்காகக் கொண்டுள்ளார்.
பட்டயக் கல்வியை முடித்த பின்னர், சிங்கப்பூர் ஆகாயப்படையில் ஒரு போர் விமானியாக விரும்புகிறார் இவர்.
செய்தி: திவ்யாதாக்ஷாய்னி