தன் உயிர்த்தோழியின் பிறந்தநாள் கொண்டாட்டம் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று ஷாலினி சாரா, 30, விரும்பினார். ஆனால் வெளிப்புறங்களில் அமர்ந்து உணவருந்துவதற்கான (picnic) அலங்காரச் சேவை வழங்கும் நிறுவனங்கள் எதுவும் அவரது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இல்லை.
அதனால் தோழியின் பிறந்தநாளுக்குத் தானே ‘பிக்னிக்’ அலங்காரம் செய்யலாம் என்று இறங்கினார் ஷாலினி. தனது கைவண்ணத்தில் உருவான அலங்காரத்தைக் காட்டும் படங்களை அவர் தன் சமூக ஊடகப் பக்கத்தில் பதிவேற்றம் செய்தார்.
படங்களுக்கு மக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்தது. பலரும் ஷாலினியின் ‘பிக்னிக்’ அலங்காரச் சேவையை நாடிவர, அதில் உருவானதுதான் ஷாலினியின் ‘பை இன் த ஸ்கை பிக்னிக்ஸ்’ (pie in the sky picnics).
சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் பட்டம் பெற்ற இவர், விருந்தோம்பல் துறையில் இருந்தார். நான்கு ஆண்டுகளாக ஹோட்டலின் விளம்பர, தொடர்பு அதிகாரியாக முழுநேர வேலையில் இருந்த அதே வேளையில் ‘பிக்னிக்’ அலங்காரச் சேவையை வழங்கிவந்தார்.
இருப்பினும் ஹோட்டல் வேலை, அவருக்கு மனநிறைவும் அளிக்கவில்லை, அவருடைய படைப்பாக்கத் திறனை வெளிப்படுத்த வாய்ப்பும் தரவில்லை. அதனால் ஷாலினி அந்த வேலையை விட்டு கடந்த ஐந்து மாதங்களாக ‘பிக்னிக்’ அலங்காரச் சேவை வழங்குவதை முழுநேரமாகச் செய்துவருகிறார்.
அலங்காரத்தைச் செய்து முடிப்பதற்குக் கிட்டத்தட்ட 20 நிமிடங்களிலிருந்து 2 மணி நேரம் வரை தேவைப்படுவதாக ஷாலினி குறிப்பிட்டார். தமது அலங்காரம் தனித்துத் தெரிவதற்கு ‘பின்ட்ரெஸ்ட்’ இணையத்தளத்தை நாடுவதாக பகிர்ந்துகொண்டார். அதில் வெளிநாட்டு நிறுவனங்களின் ‘பிக்னிக்’ அலங்காரங்களைப் பார்த்துத் தன் அலங்காரத்தைத் திட்டமிடுவதாகக் கூறுகிறார் ஷாலினி.
பெரும்பாலும் வாரஇறுதிகளில் அலங்காரங்களைத் தனியாகச் செய்யும் ஷாலினி, கொண்டாட்டங்கள் பிரம்மாண்டமாக இருந்தால் பகுதிநேர ஊழியர்களின் உதவியை நாடுவதாகச் சொன்னார்.
வருமானம் நிலையாக இருக்காது, அல்லது கொவிட்-19 கட்டுப்பாடுகள் மீண்டும் வந்துவிடலாம் போன்ற கவலைகளுக்கு இடையிலும் ஷாலினியின் பெற்றோர் தங்கள் மகளின் கனவை நனவாக்க நம்பிக்கைத் தூண்களாக உள்ளனர். தம் தந்தை அலங்காரம் தேவைப்படும் இடங்களுக்குத் தம்மை அழைத்துச் சென்று உதவுவதாக ஷாலினி கூறுகிறார்.
‘பிக்னிக்’ அலங்காரம் பெரும்பாலும் வெளிப்புற இடங்களில் தேவைப்படுவதால் தாம் சந்திக்கும் மிகப் பெரிய சவால், வானிலைதான் என்று கூறுகிறார் ஷாலினி. வானிலை சாதகமாக அமையாவிட்டால் அதற்கான மாற்றுத் திட்டத்தையும் தம் வாடிக்கையாளர்களுக்காக வைத்திருப்பார்.
“திருமணத்திற்குச் சம்மதம் கேட்டல், பிறந்தநாள் விழா, மணப்பெண்ணுக்காக தோழிகள் நடத்தும் கொண்டாட்டம் எனப் பலரின் வாழ்க்கையில் நிகழும் முக்கியமான தருணங்களில் நானும் பங்காற்றி உள்ளேன் என்ற எண்ணமே எனக்கு மனநிறைவை அளிக்கிறது,” என்று கூறுகிறார் ஷாலினி.
தன் சேவையைத் தொடர்ந்து செய்ய, வாடிக்கையாளர்களின் பாராட்டு மழை தமக்கு ஊக்கமளிப்பதாகவும் அவர் தெரிவித்தார். தம் அலங்காரத் திறன்களை மேம்படுத்திக்கொண்டு பிரம்மாண்ட அளவிலான நிகழ்ச்சிகளுக்குத் திட்டமிடும் நிர்வாகப் பணியில் எதிர்காலத்தில் ஈடுபட ஷாலினி திட்டமிட்டுள்ளார்.
செய்தி: திவ்யாதாக்ஷாய்னி
படங்கள்: ஷாலினி