எங்கள் பள்ளியின் முன்னாள் மாணவர் ஒருவர், மருத்துவராகப் பணியாற்றி சமுதாயத்தில் முக்கிய அங்கம் வகிப்பது எங்களுக்குப் பெருமை சேர்க்கும் ஒன்று.
செயின்ட் ஜோசப் கல்வி நிலையத்தின் முன்னாள் மாணவரான 27 வயது திரு நவீன்குமார் சுப்பிரமணியன், பள்ளி நாள்களில் இந்திய கலாசார மன்றத்தில் தலைவராகவும் இருந்தார்.
அவர் ஐந்தாண்டுகளாக ஸ்காட்லாந்தின் டண்டீ பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பை மேற்கொண்டு தற்போது தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.
பள்ளியின் வரலாற்றிலேயே முதல்முறையாக இந்திய கலாசார முகாமுக்கு ஏற்பாடு செய்த பெருமை திரு நவீன்குமாரைச் சேரும். பள்ளியில் பல்வேறு முகாம்கள் நடந்தபோதும் இந்திய கலாசாரம் தொடர்பில் முகாம் இல்லாதது அவர் சிந்தனையைத் தூண்டியது.
தம் திட்டம் நிறைவேற, அரும்பாடுபட்டு இந்திய கலாசார முகாமை நடத்தும் பெரும் பொறுப்பை அவர் ஏற்றார்.
நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்தல், மாணவர்களைக் கவனித்துக்கொள்ளுதல், நிதித் தேவையை அறிந்து பணத்துக்கு ஏற்பாடு செய்தல் போன்ற பலதரப்பட்ட பணிகளை அவர் மேற்கொண்டார்.
தாம் மேற்கொண்டுள்ள
பணியைச் சிறப்பாகச் செய்திட வேண்டும் என்பதில் குறியாய் இருந்த நவீன்குமார், தமது குழுவினருடன் இணைந்து செயல்பட்டு முகாமை வெற்றிகரமாக நடத்தி முடித்தார்.
அன்று அவர் தொடங்கி வைத்த இந்திய கலாசார முகாம் திட்டம், இன்றுவரை நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் மாணவர்கள் கலந்துகொள்ளும் ஒன்றாக பின்பற்றப்பட்டு வருகிறது.
தமது 13வது வயதில் முதல் முகாமை ஏற்பாடு செய்த அனுபவம், அதையடுத்து வந்த முகாம்களுக்கு அவர் ஏற்பாடு செய்திட சிறந்த அடித்தளமாக அமைந்தது.
உயர்கல்வி, பல்கலைக்கழகம் என வெவ்வேறு கல்விக் கூடங்களில் தாம் கல்வி பயின்றபோதும் யாராவது தம்மிடம் ‘எங்கு படித்தீர்கள்?’ என்று கேட்டால் முதலில் தம் வாயில் வருவது ‘எஸ்ஜேஐ’தான் என்று அவர் பெருமைப்பட கூறினார்.
மக்களுக்காக சேவையாற்றும் ஒரு தொழிலில் தம்மை ஈடுபட வைத்தது அந்தப் பள்ளியையே சாரும் என்றார் அவர். பொறியியல் துறையைத் தேர்ந்தெடுக்கவிருந்த அவரை, மருத்துவத் துறையில் சேருமாறு பள்ளி நண்பர் ஊக்குவித்ததையும் நவீன்குமார் நினைவுகூர்ந்தார்.
இன்றுவரை நீடிக்கும் தம்முடைய நட்புக்குப் பாலமாக அமைந்தவை பள்ளியின் தமிழ்த்துறை மற்றும் இந்திய கலாசார மன்றமும்தான் என்றார் அவர்.
நேர்காணலின்போதுகூட திரு நவீன்குமார், எங்களுடன் ஒரு நண்பரைப் போல் உரையாடியதுடன் உயர்கல்வி மேற்கொள்வதற்கான ஆலோசனைகள் சிலவற்றையும் கூறினார்.
இந்தப் பேட்டியின் மூலம் மருத்துவர் நவீன்குமாரின் தொடர்பு எங்களுக்குக் கிடைத்துள்ளதில் பெருமிதம் கொள்கிறோம்.